திருப்பம்.. கொரோனா பற்றி முதலில் சொன்னது சீனா கிடையாது.. நாங்கள்தான்.. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
ஜெனிவா: சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக சீனா, முதலில் அறிவிக்கவில்லை என்றும் அந்த நாட்டில் உள்ள உலக சுகாதார அமைப்புதான் இதை செய்தது என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
உலகத்துக்கு தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்று சீனா தெரிவித்து வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால் இது தொடர்பான தகவல்களையும் சீனாவுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தகவல் பரிமாற்றம்
கடந்த ஏப்ரல் 9ம் தேதி உலக சுகாதார அமைப்பு இந்த நோய் தொடர்பாக தங்களின் தகவல் பரிமாற்றங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டது. வூஹான் மாநகராட்சியின், சுகாதார ஆணையம் டிசம்பர் 31-ஆம் தேதி தங்கள் நகரில் நிமோனியா தாக்கம் இருப்பதாக பதிவு செய்தது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சீனாவிலுள்ள அதிகாரிகள்
உலக சுகாதார அமைப்பின் தலைவர், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஏப்ரல் 20ம் தேதி அளித்த பேட்டியில், சீனாவிலிருந்து இந்த வைரஸ் தொடர்பாக முதல் அறிக்கை வந்ததாக தெரிவித்து இருந்தார். ஆனால் சீன அதிகாரிகளால் இது அனுப்பி வைக்கப்பட்டதா அல்லது வேறு அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டதா என்பதை அப்போது தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது வெளியிட்டுள்ள விளக்கத்தில், தங்கள் அமைப்புதான் சீன நாட்டிலிருந்து இந்த தகவல்களை பெற்று கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சீனா விவரம்
அதன்பிறகு, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் இரண்டு முறை சீன அதிகாரிகளிடம் WHO விளக்கம் கேட்டது. இந்த விவகாரம் பற்றிய தகவல்களை அவர்கள் ஜனவரி 3 அன்று வழங்கினர். அப்போதுதான் அவர்கள் வைரஸ் பரவல் தொடர்பான விவரங்களை கூறியுள்ளனர்.

நிதி உதவி
உலக சுகாதார நிறுவனத்திற்கு அதிக நிதி வழங்கி வந்தது அமெரிக்காதான். ஆனால், கொரோனா பிரச்சினையால், உலக சுகாதார அமைப்புக்கு நிதி வழங்குவதை, அமெரிக்கா நிறுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications