"உலகம் சுற்று வாலிபனாக" இருந்த ஜின்பிங்.. ஒரேடியா உள்நாட்டிலேயே முடங்கி போனாரே! என்ன காரணம் தெரியுமா
பெய்ஜிங்: சீனாவின் முகமாக இருக்கும் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் இந்தாண்டு எங்குமே வெளியே செல்லவில்லை. தொடர்ந்து உள்நாட்டிலேயே முடங்கியுள்ளார். இதற்கான காரணம் என்ன தெரியுமா! வாங்கப் பார்க்கலாம்.
சர்வதேச அரசியலைக் கவனித்தோருக்கு ஒரு விஷயம் நன்கு தெரிந்திருக்கும். சர்வதேச அளவில் சீனாவின் முகமாகவும் அந்நாட்டின் அதிபராகவும் இருக்கும் ஜி ஜின்பிங், எப்போதும் உலகெங்கும் பல நிகழ்வுகளில் தொடர்ச்சியாகக் கலந்து கொள்வார்.

ஆனால், இந்தாண்டு அவர் எங்கேயும் வெளியே வரவில்லை. இந்தாண்டு 8 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஜி ஜின்பிங் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே சீனாவுக்கு வெளியே சென்றுள்ளார். இப்படி அவர் உள்நாட்டிலேயே முடங்க என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
ஜி ஜின்பிங்: இந்தாண்டு ஜி ஜின்பிங் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே சீனாவுக்கு வெளியே நாட்களைக் கழித்துள்ளார். அதுவும் அண்டை நாடான ரஷ்யாவுக்கு அவர் சென்றது தான் ஒரே பயணமாகும். கடந்த மாதத்தில் ரஷ்யா சென்ற ஜி ஜின்பிங், அங்கு புதினை நேரில் சந்தித்திருந்தார். அவர் அதிபராகப் பொறுப்பேற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், கொரோனா காலத்தைத் தவிர்த்துப் பார்க்கும் போது அவர் இவ்வளவு குறைவாக வெளிநாடுகளுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
கொரோனாவுக்கு முன்பு வரை பார்த்தோம் என்றால்.. அவர் அமெரிக்க அதிபரைக் காட்டிலும் அதிக சர்வதேச பயணங்களை மேற்கொண்ட நபராக இருந்தார். கடந்த 2013 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஜி ஜின்பிங், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 14 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டார். அதேநேரம் அமெரிக்க அதிபரான டிரம்ப் ஒவ்வொரு ஆண்டும் 12 வெளிநாட்டுப் பயணங்களை மட்டுமே மாற்றியுள்ளார்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள்: ஆனால், இப்போது அங்கே நேர்மாறாக ஒரு சூழலே உருவாகியிருக்கிறது. அதாவது இப்போதும் வெளிநாட்டுத் தலைவர்களை அவர் சந்திக்கிறார் என்ற போதிலும், இவர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக அவர்களைச் சீனாவுக்கு வரவைக்கிறார் ஜின்பிங்.. இந்த ஆண்டு இதுவரை மட்டும் பிரான்ஸ், அமெரிக்கா உட்பட மொத்தம் 36 நாடுகளின் பிரதிநிதிகள் சீனா வந்து அவரை சந்தித்துள்ளனர்.
கொரோனாவுக்கு முன்பு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 48 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சீனாவுக்குச் சென்று ஜி ஜின்பிங்கை சந்தித்தனர். அது இப்போது 36ஆகக் குறைந்துள்ளது. அதேபோல கொரோனா காலகட்டத்தில் அவர் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுடன் வீடியோ கால் மூலம் தொடர்ச்சியாக உரையாடினார். இப்போது வீடியோ கால் மூலம் உரையாடுவதையும் அவர் கணிசமாகக் குறைத்துக் கொண்டுள்ளார்.
முக்கியம்: இப்படி வெளிநாட்டுப் பயணங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே அவர் சர்வதேச தலைவர்களுடன் உரையாடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இப்போது அறிவிக்கப்படாத பனிப்போர் நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் சீனா உலக தலைவர்களுடன் உரையாடுவது குறைப்பது என்பது சீனாவுக்குச் சிக்கலாக இருக்கும். ஏற்கனவே, சீனாவின் வெளியுறவுக் கொள்கையின் உலக நாடுகள் சந்தேக கருத்துகளைக் கூற ஆரம்பித்துள்ள நிலையில், இந்தக் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதற்குக் காரணம் என்னவென்று கேட்கிறீர்களா.. உள்நாட்டுப் பிரச்சினைகள் தான். சீனா அதிபர் இப்போது உள்நாட்டு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளார். கொரோனாவுக்கு முன்பு வரை உள்நாட்டில் ஜி ஜின்பிங்கிற்கு பெரிதாக எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இந்த முறை அப்படி இல்லை. பல பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கிறது.
என்ன காரணம்: உலகின் மற்ற நாடுகள் கொரோனாவுடன் இணைந்து வாழலாம் எனச் சொல்லி நிலையில், சீனா மட்டும் நீண்ட காலம் ஜீரோ கோவிட் கொள்கையைப் பின்பற்றியது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சீனா மக்களே தானாகப் போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. நம்ம ஊரில் வேண்டுமென்றால் தினசரி போராட்டம் வாடிக்கையான ஒன்றாக இருக்கலாம். ஆனால், சீனாவில் போராட்டம் என்பது மிகப் பெரிய சிக்கலையே காட்டுகிறது.
அதேபோல சீனாவின் வெளியுறவு அமைச்சர் திடீரென மாயமானார். அல்லது மாயமாக்கப்பட்டார். அவர் செய்தியாளர் ஒருவருடன் ரகசிய உறவில் இருந்ததாகவும் இதுவே அவரை சீன அரசு ஓரம்கட்டக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி கட்சிக்குள்ளேயும் அவருக்குப் பல பிரச்சினைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைச் சமாளிக்கவும் அவர் உள்நாட்டுத் தலைவர்களுடன் அதிகம் நேரம் செலவிட வேண்டி உள்ளது.
இவை எல்லாம் சேர்த்து உலகம் சுற்றும் வாலிபனாக இருந்த ஜி ஜின்பிங்கை உள்நாட்டிலேயே கட்டுப்போட்டுவிட்டது. அவர் சீனாவுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலையில், மறுபுறம் அமெரிக்க அதிபர் பைடன் பல உலக நாடுகளுக்கு நேரில் சென்று ஸ்கோர் செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications