அவசர போன் கால் .. உக்ரைனை மிரள வைத்த இந்தியா.. மோடியை தேடி ஓடி வந்த செலன்ஸ்கி.. என்ன நடந்தது?
டெல்லி: ரஷ்யா நடத்தும் போரில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு உக்ரைனை மிரள வைத்துள்ளது. இதையடுத்தே நேற்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பிரதமர் மோடிக்கு அவசர அவசரமாக போன் செய்தார்.
உக்ரைன் - ரஷ்யா போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ரஷ்யா தற்போது உக்ரைன் உள்ளே வேகமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளே ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் உக்ரைன் நேட்டோ நாடு இல்லை என்பதால் இந்த போரில் தலையிட அமெரிக்கா மறுத்துவிட்டது. அமெரிக்க படைகள் ரஷ்யாவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்காது என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துவிட்டார்.

இந்தியாவின் ஆதரவு
உக்ரைன் போர் விஷயத்தில் தொடக்கத்திலேயே இந்தியாவின் ஆதரவை உக்ரைன் கேட்டு இருந்தது. முக்கியமாக இந்தியா தங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் தெரிவித்து வந்தார். அதில், இந்தியா இந்த போரில் நடந்துகொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி உடனடியாக புடினை அழைத்து பேச வேண்டும். எத்தனை தலைவர்கள் புடின் உடன் பேசுவார்கள், அதில் எத்தனை பேர் பேச்சை புடின் கேட்பார் என்று தெரியவில்லை. ஆனால் பிரதமர் மோடி வலிமையானவர். அவர் சொன்னால் புடின் கேட்க வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்தியாவிற்கான உக்ரைன் தூதர் தெரிவித்தார்.

கொடுக்கவில்லை
ஆனால் உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு கொடுக்கும் முடிவில் இல்லை. உக்ரைன் ரஷ்யா போரால் ரஷ்யாவையோ, மேற்கு உலக நாடுகளையோ பகைத்துக்கொள்ளும் முடிவில் இந்தியா இல்லை. ரஷ்யாவிற்கு எதிரான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து உள்ளது. அதாவது இந்தியா இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை. இந்தியாவின் இந்த முடிவிற்கு பின் வேறு சில காரணங்கள் இருக்கின்றன.

இந்தியா என்ன சொன்னது
இந்தியா கூறிய விளக்கத்தில், இந்தியா எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும் வகையில் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ரஷ்யாவுடன் உள்ள பாரம்பரிய உறவை பேணும் வகையிலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளிடம் உள்ள நட்பை காக்கும் வகையிலும் நாங்கள் இங்கு வாக்களிக்கவில்லை. எதிர்காலத்தில் உலக ரஷ்யா - மேற்கு உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தையை ஏற்படுத்தும் வகையில் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்து உள்ளது.

உக்ரைன் அதிர்ச்சி
ஆனால் இந்தியாவை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த உக்ரைனுக்கு இது மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் உக்ரைன் - ரஷ்யா பிரச்சனையில் இந்தியாதான் சமாதானம் பேச தகுதியான நாடு. மேற்கு உலகு, ரஷ்யா இரண்டுக்கும் நெருக்கமாக இருக்கும் ஒரே வலிமையான நாடு இந்தியாதான். அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவின் இந்த திடீர் முடிவு உக்ரைனை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்தியா எதை பற்றியும் கவலைப்படாமல் இந்த முடிவை எடுத்துள்ளது.

உக்ரைன் பிளான் சொதப்பல்
இந்தியாவிடம் அமைதியாக கோரிக்கை விடுத்த உக்ரைன் இன்னொரு பக்கம் இந்திய மாணவர்களை வெளியே அனுப்பாமல் பிளாக் மெயில் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது உக்ரைன் நாட்டில் உள்ள தமிழ் மாணவர்கள் உட்பட இந்திய மாணவர்களை அங்கிருந்து எளிதாக வெளியேற விடாமல் பிளாக் மெயில் செய்து இந்தியாவின் ஆதரவை உக்ரைன் பெற முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. ஆனாலும் உக்ரைன் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை.

உக்ரைன் பழைய வரலாறு
உக்ரைனின் பழைய வரலாறு அப்படி. உக்ரைன் பெரிய விவகாரங்கள் எதிலும் இந்தியாவை ஆதரித்தது இல்லை. உதாரணமாக பாகிஸ்தான் - இந்தியா மோதலில் உக்ரைன் பாகிஸ்தான் ஆதரவு. அதேபோல் பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பின் உக்ரைன் பாகிஸ்தானுக்கு பீரங்கிகளை வழங்கி உதவியது. இந்தியாவை கடுமையாக எதிர்த்தது. இலங்கை போரில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உக்ரைன் எடுத்து இருந்தது.

ரஷ்யாவை ஆதரிக்க பயமில்லை
இதனால் தற்போது நேரம் பார்த்து இந்தியா உக்ரைனை ஆதரிக்காமல் தவிர்த்து உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம். 25 நாடுகள் வரை உக்ரைனை ஆதரிக்கிறது. . அமெரிக்கா, நெதர்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகள் என்று மொத்தம் 25 நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன. ரஷ்யாவிற்கு எதிராக இந்த நாடுகள் ஒன்றாக உக்ரைனுக்கு பின் சேர்ந்து உள்ளன. ஆனால் இந்தியா எதற்கும் அஞ்சாமல், ரஷ்யாவை எதிர்க்காமல் நடுநிலையாக இருக்க முடிவு செய்துள்ளது.

மோடிக்கு கால்
இந்தியா இல்லாமல் ரஷ்யா - உக்ரைன் சமாதானம் வாய்ப்பு இல்லை என்பதால்தான் நேற்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவசர அவசரமாக பிரதமர் மோடிக்கு கால் செய்தார். நீங்கள் உக்ரைனை ஆதரிக்க வேண்டும். உக்ரைனில் அந்நிய நாட்டு படைகள் உள்ளன. அதை வெளியேற்ற வேண்டும். இந்தியா எங்களுக்கு ஆதரவாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்தியாவின் துணிச்சலான முடிவை அவர் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவின் இந்த முடிவு உலக நாடுகளை மிரள வைத்துள்ள நிலையில் ரஷ்யா மட்டும் இந்தியா நடுநிலையாக இருப்பதாக கூறி இந்தியாவை பாராட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications