மொத்தமாக மாறும் சர்வதேச அரசியல்.. இஸ்ரேல் போரால் அரபு நாடுகள் அதிரடி நிலைப்பாடு.. இனி கஷ்டம்தான்
டெல் அவிவ்: காசாவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகப் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் போர் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கும் இடையேயான உறவைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே தெரிகிறது
இஸ்ரேல் நாட்டில் கடந்த அக். 7ஆம் தேதி ஆரம்பித்த போர் 10 நாட்களுக்கு மேலாகத் தொடர்கிறது. இஸ்ரேல் மற்றும் காசா நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், யுத்தம் தொடர்ந்து வருகிறது.

அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர நடவடிக்கைகளை மெல்ல ஆரம்பித்த நிலையில், இந்தப் போர் அதைச் சிக்கலான ஒன்றாக மாற்றுகிறது. இஸ்ரேல்- அரபு நாடுகள் உறவு மேலும் மோசமான ஒன்றாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரபு நாடுகள்: இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரம் காரணமாகப் பல ஆண்டுகளாகவே இஸ்ரேல்-அரபு நாடுகள் இடையேயான உறவு சுமுகமாக இருந்தது இல்லை. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு வழியாகக் கடந்த 2020 முதல் மெல்ல இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்தது. இந்தச் சூழலில், திடீரென வெடித்துள்ள இந்தப் போர் இயல்பு நிலை திரும்புவதைப் பாதிக்கிறது.
ஏற்கனவே பேச்சுவார்த்தையை நிறுத்துவதாகச் சவுதி அரேபியா அறிவித்துவிட்டது. அதிலும் காசா மருத்துவமனை தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாக மாறிவிட்டது. ஜார்டன், எகிப்து நாடுகள் இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் உடன் ஆலோசிக்க இருந்த நிலையில், அதை ரத்து செய்வதாக இரு நாடுகளும் அறிவித்துவிட்டன.
இரு வேறு நிலைப்பாடு: காசா மருத்துவமனை தாக்குதல் விவகாரத்தில் உலக நாடுகள் இரு வேறு நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், 500 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமில்லை என்றும் வேறு க்ரூப் தான் இதற்குச் சாதகம் எனக் கூறியிருந்தது. மறுபுறம், ஐக்கிய அமீரகம், சவுதி, எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
காரணம் என்ன: பாலஸ்தீனர்கள் மற்றும் அரபு நாடுகளைப் பொறுத்தவரை இந்த போர் என்பது கடந்த அக். 7ஆம் தேதி தொடங்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரைக் கடந்த 1948இல் இஸ்ரேல் தன்னை தனி நாடாக அறிவித்தது முதலே தொடர்கிறது.
அப்போது எகிப்து, ஈராக், ஜார்டன், லெபனான், சிரியா நாடுகள் இஸ்ரேல் உடன் போரில் ஈடுபட்டது. இதில் இஸ்ரேலுக்கு வெற்றி கிடைத்தது. இந்தப் போர் முடிவில் முன்மொழியப்பட்ட பாலஸ்தீன நாட்டின் 60% இஸ்ரேல் கைகளுக்குச் சென்றது. மேலும், பாலஸ்தீனத்தை சேர்ந்த 50% மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியே வேண்டி இருந்தது.
மோசம்: அதன் பிறகு நடந்த ஒவ்வொரு மோதலிலும் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமானது. ஒவ்வொரு யுத்தத்திலும் இஸ்ரேல் புது புது பகுதிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. எகிப்து காசா பகுதியை இஸ்ரேலிடம் இழந்தது.. சிரியா கோலன் குன்றுகளை இழந்தது.. ஜோர்டான் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையின் கட்டுப்பாட்டை இஸ்ரேலிடம் இழந்தது. பாலஸ்தீனம் மட்டுமின்றி பல அரபு நாடுகள் தங்கள் நிலத்தை இஸ்ரேலிடம் இழந்தது. இது அரபு நாடுகளின் முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது.
அரபு நாடுகளிலும் பாலஸ்தீனத்தைச் சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என்பதற்கு மிகப் பெரிய ஆதரவு இருந்தது. இருப்பினும், கடந்த கால நிகழ்வுகளால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2020இல் இஸ்ரேல் பஹ்ரைன், ஐக்கிய அமீரகம் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், சவுதி அரேபியாவும் இஸ்ரேலுடன் விரிவான வர்த்தக மற்றும் ராணுவ உறவுகளை வளர்க்கப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது.
மீண்டும் சிக்கல்: இந்தச் சூழலில் தான் காசாவில் ஏற்பட்டுள்ள இஸ்ரேல் ஹமாஸ் படை யுத்தம் மீண்டும் நிலைமையை பழையபடி மோசமானதாக மாற்றியுள்ளது. தற்போதைய சூழலில் போர் நீண்ட காலத்திற்குத் தொடரும் என்பது போலத் தெரியும் நிலையில், மீண்டும் இஸ்ரேல் அரபு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்து இயல்பு நிலை திரும்ப நீண்ட காலம் ஆகும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications