"36 மணி நேரம் ஆச்சு!" இன்னும் பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் வரல.. உண்மையில் என்ன காரணம்! பரபர தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வாக்குப்பதிவு முடிந்து 36 மணி நேரத்துக்கு மேல் ஆகிய போதிலும், இன்னும் வெற்றியாளர் யார் எனத் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் அங்கே குழப்பமான ஒரு சூழலே இருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் தான் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்முடிந்து து. தொடர்ந்து அங்கே வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது.

இருப்பினும் வாக்குப்பதிவு நடந்து சுமார் 36 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அங்கே சுமார் 25% வாக்குகள் எண்ணப்படவில்லை. வெற்றியாளர் யார் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. தேர்தல் முடிவுகள் தாமதமாகத் தாமதமாக அங்கே குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
என்ன காரணம்: இணையச் சேவையில் சிக்கல் இருப்பதால் வாக்கு எண்ணிக்கை தாமதமாவதாகப் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தேர்தல் முடிவுகளை வெளியிடுமாறு தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களில் பதிவாகும் வாக்குகள் இணையத்தில் அப்டேட் செய்யப்பட்டு இறுதி முடிவு வெளியிடப்படும்..
இப்போது இணையச் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதால் அதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்த தாமதத்தால் அங்கே வன்முறையும் அதிகரித்துள்ளது. தேர்தல் நாளில் அங்கே ஏற்பட்ட வன்முறையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50+ பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதால் அங்கே மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தாமதம் ஏற்பட்டதில் இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இம்ரான் கான் கட்சி: பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதாகியுள்ள இம்ரான் கானால் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இம்ரான் கான் ஜெயிலில் இருக்கும் நிலையில், அவரது கட்சியினரும் கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்திக்க நேர்ந்ததாக அக்கட்சியினர் கூறுகின்றனர். மேலும், அவரது கட்சியைச் சேர்ந்த பல வேட்பாளர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட வேண்டிய சூழலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்ற போதிலும் அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் ஓரளவுக்கு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி அங்குள்ள 266 இடங்களில் 200+ தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இம்ரான் கான் கட்சியின் ஆதரவுடன் களமிறங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற கட்சிகள்: இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் அவருக்குக் கிடைக்காது என்றே தெரிகிறது. இதில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) 64 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 40 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. எனவே, அங்கே இந்த முறையும் ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை அங்கே ஏற்கனவே பொருளாதார குழப்பம் நிலவும் நிலையில், தேர்தல் முடிவுகளை விரைவாக அறிவிப்பது தேவையில்லாத குழப்பங்களை நீக்கும். ஏற்கனவே இந்தத் தாமதத்தால் அந்நாட்டின் நிதிச் சந்தைகளில் பல பாதிப்புகள் ஏற்பட்டது. அந்நாட்டின் பங்குச்சந்தை மற்றும் அந்நாட்டு ரிசர்வ் பாண்டுகள் கடுமையாகச் சரிந்துள்ளன.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மேலும் தாமதமானால் அங்கே வன்முறை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதனால் இணையச் சிக்கலைச் சரி செய்து தேர்தல் முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications