"விமானத்திற்கு நோ.." உக்ரைன் நாட்டிற்கு ரயிலில் சென்ற பிரதமர் மோடி.. உண்மையில் என்ன காரணம்! பின்னணி
கீவ்: பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது வழக்கமாக விமானத்தில் தான் செல்வார். ஆனால், இப்போது உக்ரைன் நாட்டிற்குப் பிரதமர் மோடி ரயில் மூலமாகவே சென்றுள்ளார். இதற்கான காரணம் என்ன.. விமானத்தில் செல்லாமல் சுமார் 20 மணி நேரம் பிரதமர் மோடி ரயிலில் பயணிக்க என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி தற்போது போலந்து நாட்டில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் சென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கிருந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார்.

ரயில் பயணம்: வழக்கமாகப் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது விமானம் மூலமாகவே செல்வார். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாகப் பிரதமர் மோடி போலந்தில் இருந்து உக்ரைனுக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றுள்ளார். டிரைன் ஃபோர்ஸ் ஒன் என்று அழைக்கப்படும் ரயில் மூலம் பிரதமர் மோடி உக்ரைன் சென்றுள்ளார். இந்த டிரைன் ஃபோர்ஸ் ஒன் அதன் ஆடம்பர வசதிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சேவைக்காக அறியப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் சுமார் ஏழு மணி நேரம் மட்டுமே இருக்கப் போகும் பிரதமர் மோடி, அதற்காக இந்த 20 மணி நேர ரயில் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
என்ன காரணம்: விமானத்தில் போனால் வேகமாகப் போக முடியும் என்ற போது ஏன் பிரதமர் மோடி ரயிலில் சென்றார் என்ற கேள்வி பலருக்கும் வரும். ரஷ்யா- உக்ரைன் மோதல் காரணமாக உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே பிரதமர் மோடி ரயில் மூலம் உக்ரைன் சென்றுள்ளார். இந்த நேரத்தில் விமானம் இயக்கப்பட்டால் அது பாதுகாப்பானதாக இருக்காது என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மோடியின் பயணத் திட்டம் என்ன: இன்று கீவ் நகருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்கிறார். உக்ரைன்- ரஷ்யா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையை நடத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் இந்த டிரைன் போர்ஸ் ஒன் மூலம் உக்ரைன் சென்ற முதல் நபர் பிரதமர் மோடி இல்லை. உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு இதுவரை பல தலைவர்கள் கீவ் நகருக்குச் சென்று திரும்பி இருக்கும் நிலையில், அவர்கள் அனைவருமே பாதுகாப்பு கருதி இந்த ரயில் மூலமாகவே அங்குச் சென்று திரும்பியுள்ளனர்.
முதல் நபர் இல்லை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், முன்னாள் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி எனப் பல சர்வதேச தலைவர்கள் இந்த ரயில் மூலமாகவே உக்ரைன் சென்று திரும்பியுள்ளனர்.
ரயிலின் சிறப்புகள்: இந்த ரயில் முதலில் கிரிமியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகக் கடந்த 2014இல் உருவாக்கப்பட்டது. இதன் உள்ளே இருக்கும் வசதிகளைப் பார்க்கும் போது இதை ரயில் என நம்புவதே கடினம். கிட்டதட்ட ஹோட்டலுக்கு இணையான வசதிகளைக் கொண்டதாக இது இருக்கிறது. மீட்டிங் நடந்த தேவையான இடம், ஓய்வெடுக்க சோபா, டிவி என சகலமும் இருக்கிறது.
மேலும், இந்த ரயிலின் விஐபி பயணிகளைப் பாதுகாக்கப் பல பாதுகாப்பு அம்சங்களும் இந்த ரயிலில் உள்ளன. குறிப்பாக இதன் ஜன்னல் கண்ணாடிகள் குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், எதிர்பாராத விதமாகப் பிரச்சினை ஏற்பட்டால் கூட அதைக் கையாள தேவையான அனைத்து வசதிகளும் இதில் இருக்கிறது. மேலும், இந்த ரயிலிலேயே தனியாக செக்யூரிட்டிக்களும் இருப்பார்களாம். இந்தளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் ரயிலில் தான் பிரதமர் மோடி பயணித்துள்ளார்.












Click it and Unblock the Notifications