முஸ்லீம்களுக்கு தடை: டிரம்புக்கு குட்டு வைத்த பெண் நீதிபதி
நியூயார்க்:
முஸ்லீம் நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்த அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு ப்ரூக்ளின் நீதிமன்றம் அவசர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்பை எதிர்த்து ஏற்கனவே அந்நாட்டு மக்கள் குறிப்பாக பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவர் அமெரிக்கா, மெக்சிகோ இடையே சுவர் எழுப்பும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.
இதற்கு மெக்சிகோ எதிர்ப்பு தெரிவிக்கவே அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது கூடுதலாக 20 சதவீதம் வரி விதிக்க தீர்மானித்துள்ளார் டிரம்ப்.

முஸ்லீம்கள்
ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்த 90 நாட்களுக்கு அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளிலிருந்து புகலிடம் தேடி யார் வந்தாலும் அனுமதி அளிக்கப்படாது என்றும் டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.

நீதிமன்றம்
முஸ்லீம்களுக்கு எதிரான டிரம்பின் இந்த உத்தரவை எதிர்த்து நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பகுதியில் இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆன் எம் டோனல்லி டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளார்.

தடை உத்தரவு
அதிபராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் டிரம்புக்கு கிடைத்த அடியாக நீதிமன்றத்தின் தடை உத்தரவு கருதப்படுகிறது. இது தற்காலிகமான உத்தரவு தான். இதை நிரந்தரமாக்குவது குறித்து நீதிமன்றம் விரைவில் முடிவு செய்ய உள்ளது.

முஸ்லீம்களுக்கு தடை
முஸ்லீம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட டிரம்பின் தடை உத்தரவு தற்போது செல்லாதது ஆகிவிட்டது. இதனால் முஸ்லீம்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications