இந்து மத கோட்பாடுகளால் தான்.. உலகில் அமைதியை நிலை நாட்ட முடியும்.. தாய்லாந்து பிரதமர் நெகிழ்ச்சி
பாங்காக்: இந்து மத கோட்பாடுகளும் கொள்கைகளும் அமைதியை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கூறியுள்ளார்.
உலக இந்து மாநாடு தாய்லாந்தின் பாங்காங்க் நகரில் இன்று தொடங்கியது. மொத்தம் மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. 61 நாடுகளை சேர்ந்த 2,200 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. கல்வி, பொருளாதாரம், கல்வி ஆராய்ச்சி மற்றும் ஊடகம், அரசியல் என பல்வேறு துறைகளில் தனித்துவமான சாதனைகளை படைத்த முக்கிய பிரமுகர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில், 25 நாடுகளை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் அடங்குவர். தாய்லாந்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்து சமூகத்தினர் வசித்து வருகின்றனர். தாய்லாந்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக மேம்பாட்டில் இந்து சமூகத்தினரின் பங்களிப்பும் பெருமளவில் உள்ளது. இந்த நிலையில், தான், தாய்லாந்தில் இன்று துவங்கியுள்ள உலக இந்து மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உலக இந்து மாநாட்டில், உலக இந்து பொருளாதார மன்றம், இந்து கல்வி மாநாடு, இந்து ஊடக மாநாடு, இந்து அரசியல் மாநாடு, இந்து பெண்கள் மற்றும் இளைஞர் மாநாடுகள், இந்து அமைப்புகள் மாநாடு உட்பட ஏழு விதமான தலைப்புகளில், இணை மாநாடுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில், உலக இந்து மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் தாய்லாந்து நாட்டின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பங்கேற்று உரையாற்றுவதாக இருந்தது.
ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் இந்த மாநாட்டில் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பங்கேற்கவில்லை. எனினும், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உரை நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது. தாய்லாந்து பிரதமர் உரையில், "இந்து மத கோட்பாடுகளும் கொள்கைகளும் அமைதியை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் உலகம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அகிம்சையின் உத்வேகத்தை இந்து மதத்தில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக தாய்லாந்து பிரதமர் கூறியதாவது:- இந்து மதத்தின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக இந்து மாநாட்டை தாய்லாந்து நடத்துவது பெருமை அளிக்கிறது. உலகம் பல்வேறு பிரச்சினைகளால் கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், இந்து மதத்தின் அகிம்சை, உண்மை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் ஆகிய கோட்பாடுகளில் இருந்து உத்வேகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உலகில் அமைதியை நிலை நாட்ட முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications