உலகின் அடுத்த உயரமான கட்டிடம்.. உடைக்கப்பட்ட தடைகள்.. மீண்டும் சவுதி அரேபியாவில் பணிகள் விறுவிறு
ரியாத்: உலகின் அடுத்த உயரமான கட்டிடமான சவுதி அரேபியாவின் ஜெட்டா டவரில் மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
முன்னதாக பெரும் கோடீஸ்வரரரான இளவரசர் அல்வலீத் பின் தலாவின் லட்சியத் திட்டமான சவூதி அரேபியாவில் 1000 மீட்டர் உயர வணிக கட்டிடம் கட்டும் திட்டம் பணக்காரர்களுக்கு இடையே வெளிப்படையான அதிகார போட்டியின் காரணமாக திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தகட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தால் இதுதான் உலகின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெறும்.
உலகில் தற்போது எம்பயர் ஸ்டேட் கட்டிடம், பிலடெல்பியா சிட்டி மற்றும் புர்ஜ் கலீஃபா ஆகியவை பலரும் வியந்து பார்க்கும் உலகின் பிரம்மாண்டமான கட்டிடங்கள். உலகின் மிக உயரமான இந்த மூன்று கட்டிடங்கள், வானத்தில் வாழும் உணர்வை தரும் தனிச்சிறப்பு உடையவை ஆகும்.
இந்த கட்டிடங்களுக்கு போட்டியாக உலகின் மிகப்பெரிய கட்டிடத்தை கட்டப்போவதாக சவுதி அரேபியா அறிவித்திருந்து. வானத்தில் மிதக்கும் மேகத்தை எட்டிப்பிடிக்கும் தூரத்திற்கு ஜெட்டா டவர் அமையும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த லட்சியத் திட்டப்பணிகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்த நிலையில், பெரும் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக, திடீர் பின்னடைவைச் சந்தித்தது.
உண்மையில் இந்த முயற்சியை, கோடீஸ்வரரும், முதலீட்டாளரான இளவரசர் அல்வலீத் பின் தலால் தான் முதலில் ஆரம்பித்தார். சவுதி அரேபியாவில் 1,000 மீட்டர் உயர டவரை உருவாக்க வேண்டும் என்ற இவரது முயற்சி மட்டும் சரியான நேரத்தில் நடந்திருந்தால், லண்டனின் ஷார்ட் நமக்கு குள்ளமாக தெரியும், துபாயின் புர்ஜ் கலிஃபாவையை தூக்கி சாப்பிட்டிருக்கும். தற்போது துபாயின் புர்ஜ் கலிஃபா தான் இது உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம்.. 1000 மீட்டர் உயர ஜெட்டா டவர் பணிகள் 2013 டிசம்பரில் திட்டமிடும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2014 செப்டம்பரில் கட்டுமானப் பணிகள் நடந்தது. கடந்த 2015-க்கும் 2017-க்கும் இடையே 63 மாடிகளின் கட்டுமானப் பணிகள் நடந்தது. ஆனால் இந்த பில்டிங்கில் முதலீடு செய்த இரண்டு முக்கிய முதலீட்டாளர்கள் செய்த சில பிரச்சனையால், சட்டச் சிக்கலில் சிக்கினார்கள்.
கடந்த நவம்பர் 2017 இல், இளவரசர் அல்வலீத் மற்றும் பக்ர் பின்லேடன் உள்ளிட்டோர் பணமோசடி மற்றும் லஞ்சம் கொடுப்பது, அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்தல் வரையிலான குற்றச்சாட்டுகளில் திடீரென கைது செய்யப்பட்டனர். இதனால் இளவரசர் அல்வலீத் ரியாத்தில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டனில் 83 நாட்கள் காவலில் அடைக்கப்பட்டார். பின்னர் அரசு அவரை விடுவித்தது. எதனால் விடுவித்தது என்பது இன்று வரை தெரியவில்லை..

இதனிடையே 252 மாடிகளைக் கொண்டதாகத் திட்டமிடப்பட்ட ஜெட்டா டவர், வெறும் 63 மாடிகளில் நின்று 1,000 மீட்டர் உயரத்திற்குப் பதிலாக 250 மீட்டர் உயரத்துடன் நின்றது. முழு கட்டமைப்பும் முடிக்கப்படவில்லை. அரைகுறை வேலைகள் நடந்த கான்கிரீட் கட்டிடமாக தடைபட்டு நின்றது. சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெட்டா டவர் திட்டம் மீண்டும் கட்டுமானங்கள் நடைபெற தொடங்கி உள்ளது. இது தொடர்பாக ஜெட்டா டவரை கட்டும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றில் ஒரு பங்கு முடிவடைந்த இந்த கட்டிடப்பணியில், மீதமுள்ள பணிகளுக்கான ஏலங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கட்டுமான நிறுவனங்களை அந்த டவரை கட்டும் நிறுவனம் அழைத்துள்ளது. பணிகள் முடிந்தால் சவுதி அரேபியாவின் ஜெட்டா டவர் தான் உலகின் உயரமான கட்டிடமாக மாறும்.












Click it and Unblock the Notifications