இப்படி மட்டும் இருந்தா போதும்.. எந்த ஊர்லயும் கொரோனா எட்டிப் பார்க்காது.. மலைக்க வைத்த மலை நகரம்!
மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இத்தாலியை விட அதிக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video
ஆனால், அங்கே இருக்கும் ஒரு சிறிய மலை நகரம், கொரோனா வைரஸ் தங்களை அண்டாத வகையில் மிக சிறப்பாக நிர்வாகம் நடத்தி வருகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும், சிறிய ஊரும், நகரமும் இருந்து விட்டால் கொரோனா வைரஸ் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

தனிமையில் ஜகாரா
கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவுக்கு அடுத்து, ஸ்பெயினில் தான் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் 1,24,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், அந்த நாட்டில் இருக்கும் மலை நகரமான "ஜகாரா டி லா சியர்ரா" வெளி உலகில் இருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு கொரோனாவை எதிர்த்து சிறப்பாக போராடி வருகிறது.

அடைக்கப்பட்ட வழிகள்
கடந்த மார்ச் 14 அன்று ஸ்பெயினில் ஊரடங்கு போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது முதல் ஜகாரா நகரம் வெளி உலகில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது. அந்த நகரின் மேயர் சான்டிகோ கால்வன், நகருக்குள் நுழையும் ஐந்து வழிகளில், நான்கை மூடினார்.

பாதிப்பு இல்லை
இந்த இரண்டு வாரங்களில் ஸ்பெயின் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளாகி சின்னாபின்னமாகி உள்ளது. ஆனால், 1400 பேரை கொண்ட ஜகாராவில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அந்த நகரில் நான்கில் ஒரு பங்கு மக்கள் 65 வயதை கடந்த முதியவர்கள்.

சுற்றுலாப் பயணிகளுக்கு “நோ”
கொரோனா வைரஸ் வயதானவர்களை அதிகம் பாதிக்கும் நிலையில், அவர்கள் பாதுகாப்புக்கு ஜகாராவில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த மலை நகரம் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகும். ஆனால், கடந்த இரு வாரங்களாக பிரெஞ்சு, ஜெர்மன் நாட்டில் இருந்து வந்த பல சுற்றுலாப் பயணிகளை வெளியே அனுப்பி உள்ளனர்.

ஊருக்குள் வரணுமா.. இதை செய்யணும்!
ஐந்து வழிகளில் நான்கை மூடியாகி விட்டது. மீதமுள்ள ஒரு வழியில் சல வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதுவும் அந்த வாகனங்கள் ப்ளீச்சிங் பவுடர் கலந்த நீரால் சுத்தம் செய்யப்பட்டு, பின் டயரை சுத்தம் செய்ய தண்ணீர் நிரப்பப்பட்ட சிறிய பள்ளத்தில் இறங்கி ஏற வேண்டும். அதன் பின்னரே நகருக்குள் செல்ல முடியும்.

அசத்தல் திட்டம்
ஊருக்குள்ளேயும் இதே போன்ற சுகாதார நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு பத்து பேர் கொண்ட குழு தெருக்கள், வியாபார ஸ்தலங்கள் மற்றும் வீடுகளுக்கு வெளியே உள்ள இடங்களை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்கிறார்கள்.

வீட்டுக்கே வரும் பொருட்கள்
அதே போல, ஊருக்குள் இருக்கும் மக்கள் மளிகை, மருந்து ஆகியவற்றை வாங்க வீதிக்கு வருவதை தடுக்க, இரண்டு பேரை பணிக்கு நியமித்துள்ளார் ஒரு உள்ளூர் வியாபாரி. அவர்கள் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆர்டர் கொடுத்து பொருட்களைப் பெற அவர்களை அந்த ஊர் மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

மகளிர் அமைப்பு செய்யும் உதவி
அந்த ஊரில் இயங்கும் ஜாகாரில்லா மகளிர் அமைப்பு உணவு சமைக்க முடியாத வயதானவர்களுக்கு உணவு சமைத்து, அவர்கள் வீட்டின் வாசலில் வைத்து விட்டு வருகிறார்கள். அதே போல, அவர்களுக்கு தேவையான சிறிய, சிறிய உதவிகளை செய்து கொடுக்கிறார்கள்.

உற்சாகம் குறையாமல் இருக்க..
மேலும், அந்த ஊர் மக்களை உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள அந்த ஊர் மக்கள் பேஸ்புக் பக்கத்தில் தங்கள் பழைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். அதே போல, குழந்தைகளை குஷிப்படுத்த இரண்டு அலங்கார மியூசிக் கார்கள் வீதிகளில் வலம் வருகின்றன. குழந்தைகள் அதை வீட்டை விட்டு வெளியே வராமல் கண்டு களித்து வருகின்றனர்.

உதவி தேவை
ஜகாராவின் வியாபாரம் அடிபட்டு போயிருப்பதால், அந்த நகரின் வருமானம் குறைந்துள்ளது. சுற்றுலாத் தலமான அந்த நகரம், வியாபாரிகளின் தண்ணீர் வரி, மின்சாரம், வரி போன்ற செலவினங்களை தானே ஏற்றுக் கொண்டுள்ளது. இதே நிலை இன்னும் சில மாதங்கள் நீடித்தால் ஸ்பெயின் மத்திய அரசிடம் தான் உதவி கேட்க வேண்டும். இந்த நகரின் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மேலாண்மை உலகின் அத்தனை சிறிய நகரங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications