“சாகும் வரை நான் பெனாசிரின் கணவன்தான்” - 2ம் திருமண புரளிகளுக்கு சர்தாரி பதிலடி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில் அதை மறுத்துள்ள அவர் "நான் இறக்கும் வரையில் பெனாசிரின் கணவர்தான்" என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி. இவர் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆவார். இவர்களுக்கு பிலாவல் பூட்டோ என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். சர்தாரி தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கவுரவ தலைவராக பதவி வகிக்கிறார். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் ஒரு பெண் மருத்துவரை மறுமணம் அதாவது 2வது திருமணம் செய்து கொண்டதாக நேற்று பரபரப்பு தகவல் பரவியது.
அந்த பெண்ணின் பெயர் தன்வீர் ஷமானி. இவர் இந்தியாவில் ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர். தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார். இவரை சர்தாரி திருமணம் செய்து கொண்டதாக நேற்று பாகிஸ்தான் டி.விக்களிலும், இணைய தளங்களிலும் காட்டுத் தீ போன்று செய்திகள் பரவின.
இந்த தகவலை சர்தாரியின் செய்தி தொடர்பாளர் பகத்துல்லா பாபர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து சர்தாரி சார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் அதிபர் சர்தாரி தனது மனைவி பெனாசிர் பூட்டோவின் கணவராக வாழ்ந்து மடிவார்" என தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக தன்வீர் ஷமானி டி.வி சேனல்களில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சர்தாரியுடன் இருந்த காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதை சர்தாரி திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்கள் தவறாக சித்தரித்து விட்டன. கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் அதிபராக இருந்த போது இதே போன்று வதந்திகள் கிளம்பின. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். ஆசிப் அலி சர்தாரி தனது மனைவி பெனாசிர் மீதும், மாமனாரானன மறைந்த பிரதமர் ஷுல்பிகர்அலி பூட்டோ மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.