விரைவில் முடிவுக்கு வரும் போர்? புதின் நிலைப்பாட்டில் தெரியும் மாற்றம்! ஜெலன்ஸ்கி முக்கிய தகவல்
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், இதில் ரஷ்யாவின் நிலைப்பாடு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா முழு வீச்சில் போரைத் தொடங்கியது. இந்தப் போர் 3ஆவது வாரமாக இன்றும் தொடரும் நிலையில், முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.
ரஷ்யா இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

உக்ரைன் போர்
அதேநேரம் உக்ரைன் வீரர்கள் பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து இந்தளவுக்குப் போட்டியிடுவார்கள் என யாரும் நினைக்கவில்லை. பல இடங்களில் ரஷ்ய ராணுவத்தால் முன்னேற முடியவில்லை. தலைநகர் கீவ், கார்கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முயன்று வருகிறது. இருப்பினும், உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதால், பல நாட்களாக இந்த நகரங்களைச் சுற்றி சண்டை நடைபெற்று வருகிறது. இது ரஷ்யா ராணுவத்திற்குக் கடுமையான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின்
இதன் காரணமாக ரஷ்யாவின் நிலைப்பாட்டில் சற்று மாற்றம் ஏற்படத் தொடங்கி உள்ளது. போர் தொடங்கியது முதல் அமைதி பேச்சுவார்த்தை குறித்து புதின் எதுவுமே கூறாமல் இருந்தார். இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு, உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் புதின் தெரிவித்திருந்தார். அமைதி பேச்சுவார்த்தை குறித்து அதிபர் புதின் முதல்முறையாக பாசிட்டிவான கருத்துகளைத் தெரிவித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
இந்தச் சூழலில் பேச்சுவார்த்தை குறித்தும் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைனில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவிடம் இப்போது வேறுபட்ட அணுகுமுறை தெரிவதாகக் குறிப்பிட்டார். ரஷ்யா தரப்பில் இருந்து முன்பு எச்சரிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருந்ததாகவும் இப்போது தான் போருக்கு முடிவுக்குக் கொண்டு வரும் நல்ல சிக்னல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாக்கு
அதேநேரம் ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடுகளைத் தாக்குவதையும் அதிபர் ஜெலன்ஸ்கி நிறுத்திக் கொள்ளவில்லை. இன்று காலை அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், "ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் நிறைய ஆயுதங்களை வைத்துள்ளனர். இருப்பினும், ரஷ்ய ராணுவத்தால் ஒருபோதும் எங்களை வெல்ல முடியாது, அவர்களுக்கு அத்தகைய வலிமை இல்லை, அவர்களிடம் வன்முறையும் பயங்கரவாதமும் மட்டுமே உள்ளது. ஆனால், எங்களிடம் அவர்களைத் தடுத்து நிறுத்தம் வல்லமை உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

பொருளாதாரம்
உக்ரைன் போர் சர்வதேச பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு உலக நாடுகளும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இருப்பினும், போர் இன்னும் கூட முடியவில்லை. இந்தப் போரில் ரஷ்யாவைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உக்ரைன் தரப்பில் 1300 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications