இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பான வழக்கு.. குற்றப்பிரிவு போலீஸ் முன் கமல்ஹாசன் ஆஜர்
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தொடர்பான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு கமல்ஹாசன் இன்று ஆஜராகியுள்ளார். அவரிடம் குற்றப்பிரிவு துணை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.
Recommended Video
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் 19-ஆம் தேதி இரவு நடந்து கொண்டிருந்தது.

அப்போது பகல் காட்சியை இரவில் படமாக்க ராட்சத மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் கிரேன் மூலம் நடைபெற்றன. அப்போது பாரம் தாங்காமல் அந்த கிரேனின் பாகம் உடைந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு நசரத்பேட்டை காவல் நிலையத்திலிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இது வரை இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செட் அமைத்த நிர்வாகிகள், தொழிற்சாலையில் பயன்படுத்தும் கிரேனை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்ட உரிமையாளர், கிரேன் ஆபரேட்டர் ராஜன் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து இயக்குநர் சங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி கடந்த 27-ஆம் தேதி சங்கர் ஆஜராகி இரண்டரை மணி நேரம் விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று கமல் நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications