கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை! ED நீண்ட நேரம் காத்திருந்ததால் பதற்றம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தில் சோதனை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்த நிலையில் நிறுவனம் பூட்டப்பட்டிருப்பதால் வெளியே காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது ஊழியர்கள் பூட்டை திறந்த நிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீசன் மருந்து நிறுவனம் (Sresan Pharmaceutical Company) இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகளுக்கான கோல்ட்ரிப் (Coldrif) என்ற இருமல் மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது.

இவை மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த மருந்தை தமிழக அரசு வாங்குவதில்லை. தனியார் மருத்துவமனைகள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்த நிலையில் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 20 குழந்தைகளுக்கு சிறுநீரகம் செயலிழந்து பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மருந்தில் நச்சு ரசாயனமான "டை எத்தீலின் கிளைக்கால்" அதிகளவில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. இந்த நிறுவழ உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக அதிகாரிகள் சென்ற போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததை அடுத்து அங்குள்ள சுவற்றில் ஒட்டி விட்டு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் அவரது கோடம்பாக்கம் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அவரது வீடு, மருந்து நிறுவனம் தொடர்புடைய வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் தமிழக மருந்து ஆய்வாளர் தீபா வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் சோதனை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனம் பூட்டியிருப்பதால் அமலாக்கத் துறையினர் காத்திருந்தனர். பூட்டை திறக்குமாறு ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள அவர்கள் வந்து திறந்ததும் அமலாக்கத் துறை அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் சிஆர்பிஎஃப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 7 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications