ஆசையாய் டிரோன் கேமரா ஆர்டர் செய்த நபர்! 79 ஆயிரத்துக்கு வந்த பொருள் இருக்கே.. நொந்துபோன இளைஞர்
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் ஆன்லைனில் ரூ.79 ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமிரா வாங்கிய இளைஞர், பார்சலில் தனக்கு வந்த பொருளைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவிட்டது. இருப்பினும், அது சில சமயங்களில் ஆர்டர் செய்பவர்களுக்கே அதிர்ச்சி அளிக்கவும் தவறுவது இல்லை.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஸ்ரீபெரும்புதூரில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
இனி உணவு மட்டுமல்ல.. மேரேஜ் ஹாலும் டெலிவரி பண்ணுவாங்களாம்! எங்கேயும் போக வேண்டாம்! அட புதுசா இருக்கே
ஆன்லைன் ஷாப்பிங்
நவீன யுகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மிகப் பெரிய துறையாக உருவெடுத்து உள்ளது. வரும் காலங்களிலும் இந்தத் துறை அசுர வளர்ச்சி அடையும் என்றே கணிக்கப்பட்டு உள்ளது. விரும்பிய இடத்தில் இருந்து ஷாப்பிங் செய்யலாம், குவிந்து கிடக்கும் ஆப்ஷன்கள் என பல்வேறு காரணங்களால் பலரும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யவே விரும்புகின்றனர். மேலும், சில நாட்களில் வீடுகளுக்குப் பொருட்கள் டெலிவரி செய்யப்படுவதால் முதியவர்களும் கூட இதன் பக்கம் திரும்பி உள்ளனர்.
அதிர்ச்சி
அதிலும், தீபாவளி, போன்ற பண்டிகை தினங்களில் அதிரடி ஆப்பர்களும் வழங்கப்படுவதால் பலருக்கும் விருப்பமான ஒரு சாய்ஸாக ஆன்லைன் ஷாப்பிங்கே உள்ளது. இருப்பினும், சில சமயங்களில் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் சில குளறுபடிகள் நடக்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அப்படித்தான் ஆசையாக கேமரா ஆர்டர் செய்து காத்திருந்த இளைஞருக்கு வந்த டெலிவரி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிரோன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன். 35 வயதான இவர், அப்பகுதியில் ஏ.சி மெக்கானிக்கான இருக்கிறார். இவருக்கும் இவரது நண்பருக்கும் டிரோன் கேமரா ஒன்று தேவைப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் ஆன்லைனில் டிரோன் கேமராவை தேடியுள்ளனர். அதன்படி தனியார் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் டிரோன் கேமரா ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளனர்.
டெலிவரி
தனியார் டெலிவரி தளத்தில் 79,064 ரூபாய் மதிப்பில் டிரோன் கேமரா இருந்துள்ளது. கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி, அந்த டிரோனை கடந்த 20ஆம் தேதி இவர்கள் ஆர்டர் செய்துள்ளார். அந்த டிரோன் கேமரா இன்றைத் தினம் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், பார்சரல் மிகவும் தட்டையாக இருந்துள்ளது. டிரோன் கேமரா இவ்வளவு தட்டையாக இருக்காது என்பதால் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
பொம்மை கார்
இதையடுத்து மொய்தீனும் சுரேஷும் பார்சலை வீடியோ எடுத்தபடியே பிரித்துள்ளனர். அப்போது பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் டெலிவரி செய்த நபரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரும் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அந்த ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திலேயே புகார் அளித்து உள்ளனர்.
நொந்துபோன இளைஞர்
சம்மந்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாகத் தெரிவித்து உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சுரேஷ் கூறுகையில், "தொழில் வளர்ச்சிக்காக டிரோன் கேமரா வாங்க முடிவு செய்தோம். கிரெடிட் கார்ட் மூலமே இதை ஆர்டர் செய்தோம். ஆனால், எங்களுக்கு வந்ததோ பொம்பை கார். இது குறித்து புகார் அளித்து உள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்" என்று நொந்துபோய் கூறினார்.