"எனக்காக போராடிய மற்றொரு தாய் செங்கொடி".. நினைவிடத்தில் பேரறிவாளன் உருக்கம்
காஞ்சிபுரம்: எனக்காக போராடிய மற்றொரு தாய் செங்கொடி என அவரது நினைவிடத்தில் பேரறிவாளன் உருக்கமாக தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 31 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். தண்டனை காலம் முடிந்தும் சிறையிலிருந்து விடுதலை கிடைக்காத நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இந்த 7 பேரின் விடுதலைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் 31 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

பேரறிவாளனுக்கு பரோல்
இந்த நிலையில் பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த ஆண்டு பரோலில் வெளியே வந்தார். அவர் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் 9 மாதங்களாக தங்கியிருந்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

புழல் சிறை
அதன்படி அவர் கடந்த 11 ஆம் தேதி புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவு சிறை அலுவலகத்திற்கு வரவில்லை என கூறி மீண்டும் ஜோலார்பேட்டை வீட்டிற்கே பேரறிவாளன் திருப்பி அனுப்பப்பட்டார்.

பிணையில் வெளியே வந்த பேரறிவாளன்
இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் பெறுவதற்காக நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவர் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார். முகம் நிறைய புன்னகையுடன் செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், நன்றி நன்றி என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் பெறுவதற்காக நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவர் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார். முகம் நிறைய புன்னகையுடன் செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், நன்றி நன்றி என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேசவில்லை.

செங்கொடிக்கு மரியாதை
இந்த நிலையில் பேரறிவாளன் புழல் சிறையிலிருந்து வெளியே வந்ததும் தனது தாயாருடன் நேற்றைய தினம் காஞ்சிபுரத்தில் உள்ள மங்கல்பாடிக்கு சென்றார். அங்கு செங்கொடியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் எனக்காக போராடிய மற்றொரு தாய் செங்கொடி என உருக்கமாக கூறினார்.

யார் இந்த செங்கொடி?
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் செங்கொடி. இவர் ஓரிக்கையை சேர்ந்தவர். மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications