காமாட்சி அம்மனை தரிசிக்க வந்த சசிகலா.. திடீரென வந்த அமமுக வேட்பாளர்கள்.. தந்த பரிசு தான் ஹைலைட்!
காஞ்சிபுரம்: தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு அறிவித்த வி கே சசிகலா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
அவரை நேரில் சந்தித்து அமமுக வேட்பாளர்கள் வரவேற்றனர். அப்போது தியாகத் தலைவி சின்னம்மா பேரவை சார்பில் வருங்கால முதலமைச்சர் என்று எழுதப்பட்ட புகைப்படமும் சசிகலாவுக்கு வழங்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்று அதன் பின்பு விடுதலையான சசிகலா சென்னையில் ஓய்வெடுத்து வருகிறார்.
திடீர் ஓய்வு
மீண்டும் அரசியலில் இறங்கி செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சசிகலா அறிவித்தார். இதையடுத்து அதிமுகவினர் தற்போது சசிகலா விமர்சிப்பதை அடியோடு நிறுத்தி விட்டனர்.
காமாட்சி அம்மனை தரிசித்தார்
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். கும்பகோணம் தஞ்சாவூர் உள்பட பல்வேறு கோயில்களில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலிலும் சனிக்கிழமை வி கே சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
வரதராஜ பெருமாள் கோவில்
இதனை அடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சென்று மகாபெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.
அமமுக வேட்பாளர்கள்
முன்னதாக காமாட்சி அம்மன் கோவில் நுழைவுவாயிலில் அமுமுக வேட்பாளர்கள் ஆர்வி ரஞ்சித்குமார் என் மனோகரன் ஆகியோர் சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் இவர்களைத் தவிர அமமுக தொண்டர்கள் பலரும் திரண்டு வந்து சசிகலாவை வரவேற்றனர்.தியாகத் தலைவி சின்னம்மா பேரவை சார்பில் வருங்கால முதலமைச்சர் என்று எழுதப்பட்ட புகைப்படமும் சசிகலாவுக்கு வழங்கப்பட்டது.