”அன்புள்ள அப்பா! அப்பா!” காஞ்சிபுரத்தில் தந்தைக்கு மார்பிள் சிலை வைத்து வழிபடும் பிள்ளைகள்
காஞ்சிபுரம்: கடின வேலை செய்து தங்களை வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு மார்பிள் சிலை செய்து வீட்டு நுழைவு வாயிலில் வைத்து வழிபட்டு வரும் மகன்கள் வழிபட்டு வருகின்றனர்.
விஞ்ஞான வளர்ச்சியில் மயங்கி தனிமையில் வாழ விரும்பிய இக்கால இளைஞர்களால் நாளுக்கு நாள் முதியோர் இல்லங்களில் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இதைத் தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த தந்தையை போற்றும் விதமாக மகன்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தந்தை அருணாச்சல பாண்டியன்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வியாபார நிமித்தமாக வந்த அருணாச்சல பாண்டியன் என்பவர் அவ்வூரிலேயே தனது மனைவி மகளுடன் வசிக்க துவங்கி இருக்கிறார். இவருக்கு அன்புராஜ், அன்புகண்ணன் ஆகிய மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர். குடும்பத்துடன் அந்த கிராமத்திலேயே சிறிய மளிகைக்கடை மற்றும் நிதி சேமிப்பு நிறுவனத்தை அவர் நடத்தி வந்திருக்கிறார்.

தந்தை மரணம்
இந்த நிலையில் கடந்த ஒரு வருடம் முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அருணாசல பாண்டியன் மரணம் அடைந்தார். இவரது இறப்பு குடும்பத்தை பெரிதும் பாதித்து இருக்கிறது. குறிப்பாக அவரது மனைவி தேனம்மாள் கணவனின் நினைவாகவே இருந்துள்ளார். தாயாரின் நிலை கண்டு அவரது அவரது இரு மகன்களும் தனது தந்தையின் சிலையை செய்து வீட்டில் வைக்க முடிவெடுத்துள்ளனர்.

மார்பிள் சிலை
அதனையடுத்து தந்தைக்கு சிலை செய்வது தொடர்பாக பல்வேறு இடங்களில் அவரது மகன்கள் ஆலோசித்து இருக்கின்றனர். பின்னர் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மார்பில் கற்களால் தனது தந்தைக்கு மார்பளவு சிலை செய்துள்ளனர். அந்த சிலையினை தந்தையர் தினத்தன்று வீட்டின் நுழைவு வாசல் அருகே அமைத்துள்ளனர். மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கும் தந்தையின் மார்பளவு உருவச்சிலைக்கு அவர் அணிந்திருந்த சட்டை, அவருடைய பேனா உள்ளிட்ட பொருட்களை வைத்து அழகு சேர்த்து வைத்திருக்கின்றனர்.

தினமும் வழிபாடு
வீட்டிற்கு வருபவர்களும் வீட்டிலிருந்து வெளியே செல்பவர்களும் சிலையை பார்த்து விட்டு செல்லும் வகையில் சிலையை வைத்து இருக்கின்றனர். தனது தந்தையின் இந்த சிலையினை நாள்தோறும் குடும்பத்தோடு மகன்கள் வழிபட்டு வருகின்றனர். தந்தைக்கு மகன்கள் சிலை வைத்து வழிபடுவதை கண்டு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூத்த குடிமக்களை போற்றுவோம்
இதுகுறித்து மூத்த மகன் அன்புராஜ் கூறுகையில், "என் தந்தை கடினமாக உழைத்து எங்களை ஆளாக்கி பிறருக்கு உதவி செய்யும் வகையில் அறிவுரைகள் வழங்கினார். அவரது மறைவை எங்களால் ஈடு செய்ய முடியவில்லை. மூத்த குடிமக்கள் வாழும்போதே அவர்களுடைய ஆசைகள், அறிவுரைகளை கேட்டு நடக்க வேண்டும், மூத்த குடிமக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications