மேல்மருவத்தூர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ்கொண்டுவர முயற்சி.. அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு
காஞ்சிபுரம்: மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்ய முயன்ற நிலையில், கோவில் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை வெளியேற்றினர்
தமிழகத்தில் சிறியது முதல் பெரியது வரை பல கோயில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி கோவில் மட்டும்இந்து அறநிலையத்துறை கட்டுபபாட்டில் இல்லை.இந்த கோவிலை பங்காரு அடிகளார், அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதை ஏற்று காஞ்சிபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் 4 பேர் குழுவினர் நேற்று மாலை மேல்மருவத்தூர் கோவிலில் ஆய்வு செய்ய வந்தனர். அவர்கள் அறநிலையத்துறையின் உத்தரவு நகலை கோவில் ஊழியர்களிடம் காண்பித்து ஆய்வு செய்ய முயற்சித்தனர்.
ஆனால் கோவிலில் இருந்த ஊழியர்கள் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.மேலும் அதிகாரிகளை கோவிலில் இருந்து வெளியேற்றினார்கள். இதனால் அதிகாரிகளால் கோவிலில் ஆய்வு செய்ய முடியவில்லை.
இதுபற்றி உதவி ஆணையர் ரமணி மேல்மருவத்தூர் போலீசில் புகார் அளித்தார், அதில், வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவின் பேரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலை ஆய்வு செய்ய சென்று இருந்தாம். அப்போது கோவிலில் இருந்த ஊழியர்கள் எங்களை பணி செய்ய விடாமல் தடுத்துவிட்டார்கள். மேற்படி கோவிலில் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் பணி செய்ய விடாமல் இடையூறு அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.