சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோயில் பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் போக்சோவில் கைது
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவில் பூசாரியை போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பிரசாத் (27). இவர் சிவன் கூடல் சாலை சந்திப்பில் உள்ள கோயிலில் பூசாரியாக உள்ளர். இந்நிலையில் இதேப்பகுதியில் வசித்து வரும் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவியுடன் பழகி வந்திருக்கிறார்.

அந்த மாணவியை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மாம்பாக்கம் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி, இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறி அழுதிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிரசாதை கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரசாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்த போலீசார் ஶ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.