ஐயா நீங்க எங்க இங்க? மாறுவேடத்தில் சுற்றிய போலீஸ்.. கார் டிக்கி முதற்கொண்டு லஞ்சப் பணம்! குமரி ஷாக்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறு வேடத்தில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொறியாளர் அலுவலகத்தில் நடத்திய அதிரடி சோதனையில் 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் சிக்கியது. பேரூராட்சிகளின் இளம்நிலை பொறியாளரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பொதுமக்கள் அடிக்கடி குற்றம் சாட்டி வருகின்றனர். இதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துவதும் அதிகாரிகளை கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிகாரிகள் சட்டவிரோதமாக லஞ்ச பணத்தை வசூல் செய்வார்கள் என்பதால் அந்த நேரங்களில் பத்திர பதிவுத்துறை, போக்குவரத்து துறை, ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம்.
அப்படி ஒரு சோதனையில் மாறுவேடத்தில் சென்ற போலீசார், லஞ்சம் பெற்ற அதிகாரிகளை கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக சாம் செல்வராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கிள்ளியூர் உண்ணாமலைக்கடை நல்லூர் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செய்யப்பட்டுவரும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பில் எழுத லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மாறுவேடத்தில் இவரை பல நாட்களாக கண்காணித்து வந்து உள்ளனர். அவர் பலரிடம் லஞ்சம் வாங்குவதை கண்காணித்த அதிகாரிகள் மாறுவேடத்திலேயே அங்கு அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது பணியில் இருந்த சாம் செல்வராஜ் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்குவதை கண்டு கையும் களவுமாக பிடித்துள்ளார். தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் வந்த அதிகாரிகள் இளநிலை பொறியாளரை பிடித்து விசாரணை நடத்தி அவரை சோதனை செய்தபோது அவரது பேன்ட் பாக்கெட் மணிபர்ஸ் ஆகிய இடங்களில் கட்டு கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்துள்ளார்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரது காரை சோதனை செய்தபோது காரில் ஒரு பையிலும் பின்பக்க டிக்கியில் கோப்புகளுக்கு இடையேயும் பணம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்ததோடு, அந்த பணங்கள் எதுவும் கணக்கில் வராதது என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பறிமுதல் செய்த பணம் முழுவதையும் எண்ணி பார்த்தபோது சுமார் 5 லட்சத்து 34 ஆயிரம் ருபாய் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை பறிமுதல் செய்து லஞ்சம் பெற்ற இளநிலை பொறியாளர் சாம் செல்வராஜ் அவரது உதவியாளர் ஹரிஹரன் என்பவரையும் கைது செய்ததோடு பணம் கொடுக்க வந்த ஒப்பந்ததாரர்கள் 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த லஞ்ச பணத்தில் அரசு உயர் அதிகாரிகள் யாருக்கேனும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஒரு அதிகாரி ஒரு நாள் ஐந்து லட்சம் லஞ்சம் வாங்குகிறார் என்றால் இவர் எந்த அளவில் கள்ள தனமாக சம்பாதித்து இருப்பார்? இந்த பணத்தில் உயர் அதிகாரிகளுக்கு பங்கு கொடுக்க திட்டமிட்டாரா? என்பன பல தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே குமரி அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் என்பதும், அவர் தான் மாறு வேடத்தில் சென்று இளநிலை பொறியாளரிடம் இருந்து கணக்கில் வராத சுமார் ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தார் என தெரிய வந்துள்ளது. தற்போது அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications