சீமான் தொட்டதால் தீட்டாம்... தக்கலையில் காமராஜர் சிலையை கழுவி பாலபிஷேகம் செய்த காங். நிர்வாகிகள்
தக்கலை: கன்னியாகுமரி தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காமராஜர் சிலைக்கு போட்ட மாலையை காங்கிரஸ் நிர்வாகிகள் அகற்றி அந்த சிலையை கழுவி பாலபிஷேகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்தும் அதைத் தடுக்காத தமிழக அரசை கண்டித்தும் தக்கலை தாலுகா அலுவலகம் முன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக தக்கலை பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சீமான்.

காங்கிரஸுக்கு சவால்
கனிமவள கடத்தலுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டத்தை உறுதிமொழி ஏற்புடன் தொடங்கினார் நாம் தமிழர் கட்சியினர். அப்போது பேசிய நாம் தமிழர் நிர்வாகி ஒருவர், கன்னியாகுமரிக்கு சீமான் வந்தால் சமாதி கட்டுவோம் என்கிறீர்களே... கட்டுடா வந்து கட்டுடா... இங்க பார் நீ வந்து கட்டு... இல்லை நாங்க வந்து கட்டுவோம்... சீமானைத் தொட்டிருவியா... மேடையில் கால் மேல் கால் போட்டு அண்ணன் சீமான் உட்கார்ந்து இருக்கிறார் இது யார் கோட்டை? எங்கள் பாட்டன் நேசமணி கட்டிக் காத்த கோட்டை என்று ஆவேசமாக பேசி காங்கிரசாரை சீண்டினார்.

சாட்டை துரைமுருகன் சர்ச்சை பேச்சு
அதே கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியினர் சொல்கின்றனர். நீங்க அப்டேட் ஆகலையே ராஜா.. 2009-ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மவுனித்த போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகவே நாம் தமிழர் கட்சி உருவெடுத்துவிட்டது. நாங்கள் யார் என்பது ராகுல் காந்திக்கும்.. சோனியாவுக்கும் தெரியும்.. காங்கிரஸ் கட்சியினரே ஶ்ரீபெரும்புதூர் சம்பவம் போதுமே.. நாங்கள் யார் என்பதை சொல்வதற்கு (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம்) என காட்டமாக பேசினார். மேலும் தமிழக முதல்வர் குறித்தும் அவதூறாக பேசினார் சாட்டை துரைமுருகன். இதனால் சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Recommended Video

சீமான் தொட்டதால் தீட்டாம்
நாம் தமிழர் கட்சியினரின் இத்தகைய பேச்சுகளால் ஆத்திரம் அடைந்த இளைஞர் காங்கிரசார், தக்கலையில் உள்ள காமராஜர் சிலை முன் குவிந்தனர். பின்னர் காமராஜர் சிலைக்கு சீமான் அணிவித்த மாலையை தூக்கி எறிந்தனர். அத்துடன் காமராஜர் சிலையை தண்ணீரால் கழுவி பாலபிஷேகம் செய்து புதிய மாலை அணிவித்து முழக்கங்களையும் எழுப்பினர்.

பிரிவினைவாதி சீமான்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேசிய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாறன்ஸ், பிரிவினைவாதி சீமான் தக்கலை பகுதியில் வந்து நாங்கள் தெய்வமாக வணங்கும் தலைவர் காமராஜருடைய திருஉருவ சிலையை தொட்டு தீட்டுபடுத்திவிட்டார். இதனால் மனம் குமுறி அந்த சிலையை சுத்தம் செய்து பாலபிஷேகம் செய்து புதிய மாலை அணிவித்துள்ளோம் என்றார். இத்தகவலறிந்த போலீசார் அசம்பாவிதங்கள் நடைபெறாத அளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications