Exclusive: ரசிகர்கள் தேர்தலில் நிற்க நடிகர் விஜய் அனுமதி அளித்தாரா? நாஞ்சில் சம்பத் நச் பேட்டி!
கன்னியாகுமரி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக முழுமையான வெற்றியை ஈட்டும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் அக்கட்சிக்காக பரப்புரை செய்து வரும் நாஞ்சில் சம்பத்.
திமுகவின் வாக்குகளை ஒரு சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரித்தாலும், அதை மீறி வெற்றிபெறுவோம் என உறுதி கூறுகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவர், ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக நேரம் ஒதுக்கி பிரச்சாரக் கள அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
அதன் விவரம் பின்வருமாறு;

நகர்ப்புற உள்ளாட்சி
''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறேன். நேற்றும் இன்றும் கன்னியாகுமரி மாவட்டம் எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில் வெளியூர்களுக்கு செல்லவிருக்கிறேன். மக்களிடம் அதிமுக மீதான வெறுப்பு இன்னும் மாறவில்லை. சட்டமன்றத் தேர்தலின் போது பழனிசாமி மீது மக்கள் எந்தளவு கோபமாக இருந்தார்களோ, அதேயளவு தான் இப்போதும் இருக்கிறார்கள்.''

பாஜக சூழ்ச்சி
''பாஜகவின் சூழ்ச்சிக்கு பழனிசாமி இரையாகிவிட்டார். அதிமுகவினர் பல இடங்களில் திமுகவினரோடு லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங் மூலம் கரம் கோர்த்து உதயசூரியன் வெற்றிக்காக உழைத்து வருகின்றனர். யாரும் பழனிசாமி பேச்சை கேட்க அதிமுகவில் தயாராக இல்லை. இதை நான் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. மணப்பாறையில் ரமேஷ் என்கிற தம்பி பக்கா அதிமுக காரர், அவர் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு உதயசூரியனுக்கு ஓட்டுக்கேட்கிறார்.''

ஆளுமை இல்லை
''இதெல்லாம் எதை காட்டுகிறது என்றால் ஆளுமையற்றவர்களை தொண்டர்கள் தலைவராக ஏற்க மாட்டார்கள் என்பதை தான். நீட் விலக்கு கோருவதில் முதல்வர் ஸ்டாலின் காட்டும் உறுதியை, சாதாரண மக்களும் இன்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள். நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து போட வேண்டியது ஆளுநரின் தலையெழுத்து. இதிலிருந்து ஆளுநர் விலக்கே பெற முடியாது. நாங்க தமிழகத்தில் அடிக்கிற அடி லக்னோ வரை தேர்தலில் எதிரொலிக்கும்.''

எடப்பாடிக்கு பதில்
''பொங்கல் பரிசுத் தொகுப்பை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை. தவறு செய்த நிறுவனங்களையும், அதிகாரிகளையும் பிளாக் லிஸ்டில் சேர்த்து முதல்வர் கடும் நடவடிக்கை எடுத்துவிட்டார். அவர் எதை வேண்டுமானாலும் பேசட்டும் பாவம், அதிமுககாரர்களே அதை கேட்க தயாராக இல்லாதபோது அதைப்பற்றி மேலும் பேச விரும்பவில்லை. தம்பி விஜயை அரசியலில் கதாநாயகனாக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அதில் தவறேதும் இல்லை என கருதுகிறேன்.''

விஜய் மக்கள் இயக்கம்
''ஏதோ ஒரு சில வார்டுகளில் திமுகவின் ஓட்டுகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் பிரிப்பார்கள். ஆனால் அதையும் மீறி திமுக இமாலய வெற்றியை இந்த தேர்தலில் பெறும். இன்னொரு கேள்வி எனக்கு எழுகிறது, ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட தம்பி விஜய் அனுமதி கொடுத்தாரா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. ஓ.பி.எஸ்.ஸை பற்றி நான் ஒன்றும் கூறவில்லை என நினைக்காதீர்கள், இன்னும் 4 நாட்களில் பெரியகுளம், போடி செல்கிறேன். அங்கு வைத்து அவரை பற்றி பேசவிருக்கிறேன்.''












Click it and Unblock the Notifications