ரொம்ப ஒல்லியா இருக்குதே கல்யாண பொண்ணு.. மனம் நொந்து போன 40 வயது பெயிண்ட்டர்.. கலங்கும் கன்னியாகுமரி
கன்னியாகுமரி: 40 வயதான பெயிண்ட்டருக்கு இன்னும் 4 நாளில் திருமணம் நடைபெற உள்ளது. இந் நிலையில், இப்படியொரு அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.. அவரது மனக்குமுறலை யாருமே கேட்காத நிலையில், இந்த துயர முடிவை எடுத்துள்ளது குமரி மாவட்டத்தையே நிலைகுலைய வைத்து வருகிறது. என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ளது சாத்தன்கோடு வடக்கேதோப்பு.. இங்கு ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார்.. 40 வயதான ராஜேஷ் பெயிண்ட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நிச்சயதார்த்தம்: எனவே, பெற்றோரும், உறவினர்களும் ராஜேஷூக்காக பல இடங்களில் பெண் தேடி வந்தார்கள்.. எங்குமே வரன் அமையவில்லை.. இந்நிலையில், கேரள மாநிலம் பரிசுவைக்கல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை, ராஜேஷூக்கு வரன் பார்த்துள்ளனர்.. இறுதியில் இந்த பெண்ணுக்கும், ராஜேஷூக்கும் திருமணம் செய்து வைக்க உறவினர்களும் முடிவு செய்தனர். பின்னர் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது... வருகிற 9-ந் தேதி திருமணத்துக்கான நாளையும் பெரியவர்கள் குறித்தனர்.
இதையடுத்து, 2 வீட்டிலுமே திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வந்தன.. ஆனால், மணமகளை ராஜேஷுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.. நிச்சயம் செய்யப்பட்ட பெண் மிகவும் ஒல்லியாக இருப்பதாகவும், அவரை பிடிக்கவில்லை என்றும் வீட்டில் சொல்லி உள்ளார்..
குடும்பத்தினர் ஆறுதல்: ஆனாலும் அவரது மனக்குமுறலை குடும்பத்தார் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். மாறாக, இவ்வளவு வருடங்கள் இல்லாமல், வரன் ஒன்று பொருத்தமாக அமைந்துள்ளதே என்று, ராஜேஷை சமாதானம் செய்துள்ளனர்.. அத்துடன், அவரை உறவினர்கள் தேற்றியும் வந்துள்ளனர். எனினும் பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லியும் குடும்பத்தினர் கேட்காததால், ராஜேஷ் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாலையில் ராஜேஷ், தன்னுடைய வீட்டின் பக்கத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. ஆனால், அங்கு வீட்டில் யாரும் இல்லை.. வீட்டின் கதவு மட்டும் திறந்திருந்தது. இதனால் வீட்டுக்குள் சென்ற ராஜேஷ், படுக்கை அறையில் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்... வெளியே சென்றிருந்த சித்தியும், குடும்பத்தினரும் வீட்டுக்கு வந்தபோது தூக்கில் சடலமாக கிடந்த ராஜேஷை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்கள்.
போஸ்ட் மார்ட்டம்: இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கும் உடனடியாக தகவல் தரப்பட்டு, அவர்களும் விரைந்து வந்தனர்.. ராஜேஷின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... பிறகு தற்கொலை செய்து கொண்ட அறையை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது ராஜேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, கடிதம் ஒன்றை எழுதியிருப்பதை கண்டெடுத்தனர்.. அந்த கடிதத்தில், "என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை... எனக்கு வாழ பிடிக்கவில்லை" என்று மட்டும் எழுதி இருந்தாராம்..
பரபரப்பு: இதையடுத்து ராஜேஷின் அப்பா ராஜு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்னும் 4 நாளில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண்ணை பிடிக்காததால் பெயிண்டர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில்தான் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் இளம்பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் இதேபோன்ற சம்பவம் குமரியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications