கொடூரமாக கொல்லப்பட்ட வன ஊழியர், மனைவி.. 8 ஆண்டுகளாக இழுபறி விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வன ஊழியர் ஆறுமுகம் அவரது மனைவி இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் எட்டு ஆண்டுகளாகியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், உயர்நீதிமன்றம் இந்த வழ
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வன ஊழியர் ஆறுமுகம் அவரது மனைவி இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் எட்டு ஆண்டுகளாகியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவிட்டது. வழக்கை ஆறு மாதத்திற்குள் எஸ்.பி., மேற்பார்வையில் முடிக்க உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேருரை சேர்ந்தவர் வன ஊழியர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகீஸ்வரி. இவர்கள் இருவரும் கடந்த 10-11-2011ல் (8 ஆண்டுகளுக்கு முன்பு) கோட்டாரில் நடந்த திருமண வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் சுசீந்தரம் காவல் நிலையம் அருகே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த சுமார் நாற்பது சவரன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது. இவர்களை கொலை செய்ய பயன்படுத்திய தோட்டா, அரசு தோட்டா என்பது தெரிய வந்தது. கொலை சம்பவம் அரங்கேறி சுமார் எட்டு மாதங்களுக்கு பின் போலீசார் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த புத்தேரியை சார்ந்த சகாயம் என்ற ஐயப்பன் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
பல முறை உறவினர்கள் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளாகியும் ஆறுமுகத்தின் பணிக்கொடை,பலியான வன ஊழியரின் வாரிசுகளுக்கு வேலை, அரசின் உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. வழக்கின் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர யோகீஸ்வரியின் தாயார் குமாரி, இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் சிபிசிஐடிக்கு மாற்றியதோடு, எஸ்.பி. மேற்பார்வையில் வழக்கை ஆறு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications