கன்னியாகுமரி எங்க தொகுதி.. கண்டிப்பா போட்டியிடுவோம்.. அழகிரி பளிச்!
கன்னியாகுமரியில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்று அழகிரி தெரிவித்துள்ளார்
நாகர்கோவில்: கன்னியாகுமரி எங்களோட தொகுதி. கண்டிப்பா நாங்க தான் போட்டியிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்பியாக இருந்து வந்தவர் எச். வசந்தகுமார். கொரோனா பாதிப்புக்குள்ளான இவர் யாரும் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார். எம்எல்ஏவாக இருந்து வந்தவர் வசந்தகுமார். ஆசைப்பட்டு எம்பியானார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாதியிலேயே அவர் தனது பயணத்தை முடித்துக் கொள்ள நேரிட்டு விட்டது.
இந்த நிலையில் இந்தத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனால் யார் போட்டியிடப் போவது என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. காங்கிரஸே மீண்டும் போட்டியிடும் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் வேட்பாளர் யார் என்பதில்தான் தற்போது குழப்பம் தலை தூக்கியுள்ளது.
கன்னியாகுமரி இடைத்தேர்தல்... களப்பணியில் காங்கிரஸ்.. விஜயதரணிக்கு விட்டுக்கொடுப்பாரா விஜய்வசந்த்..?
எம்எல்ஏவான விஜயதாரணி இங்கு போட்டியிட ஆசைப்படுகிறார். காய்களையும் நகர்த்தி வருகிறார். களப் பணிகளையும் கூட முடுக்கி விட்டுள்ளார். அதேசமயம், வசந்தகுமாரின் ஆதரவாளர்கள் அவரது மகன் விஜய் வசந்த்தை களம் இறக்க முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள எச். வசந்தகுமாரின் நினைவிடத்திற்கு கே.எஸ். அழகிரி இன்று வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் "கன்னியாகுமரி எங்க தொகுதி.. நிச்சயமாக நாங்கள் போட்டியிடுவோம். வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை முடிவு செய்து அறிவிக்கும்" என்றார் அழகிரி.