அரளிக்காயை பறித்து ஆனந்திக்குக் கொடுத்து.. சுசீந்திரம் அருகே பரிதாப தற்கொலை
Recommended Video
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் அஜித் (22), கட்டட தொழில் செய்து வந்தார். இவரது உறவினர் பெண்ணான அதே பகுதியை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி ஆனந்தி (17) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரது வீட்டிலும் காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. ஆனந்திக்கு திருமண வயது ஆகாததால் இவர்களது வீட்டில் இதுகுறித்து எதிர்ப்பு இருந்துவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அஜித் அரளிக்காயை பறித்து ஆனந்திக்கு கொடுத்துவிட்டு தானும் அரைத்து தின்றுவிட்டு அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுடுகாட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரத்தில் ஆனந்தியும் அவரது வீட்டில் அரளிக்காயை தின்றுவிட்டு உயிரிழந்தார்.
காதலர்கள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.