நாஞ்சில் சம்பத் போட்ட அந்த ஒரு ட்வீட்! பரபரப்பான காவல்துறை! பதறித்துடித்து விசாரிக்கும் அன்பர்கள்!
கன்னியாகுமரி: தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பொருள்படும் வகையில் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
''Y- பிரிவு பாதுகாப்பில் இருப்பவர், என் உயிரெடுக்க உத்தரவிட்டிருப்பதாக ஊடக நண்பர் என்னிடம் சொன்னார், இதை உலகுக்கு சொல்கிறேன்.'' என்பது தான் நாஞ்சில் சம்பத் போட்ட பதிவாகும்.
இதனிடையே இது தொடர்பாக கவனத்தில் கொண்டு, உடனடியாக நாஞ்சில் சம்பத்தை தொடர்பு கொண்ட காவல்துறை போலீஸ் பாதுகாப்பு தருவதாக கூறியிருக்கிறது. ஆனால் அதனை வேண்டாம் என அடியோடு மறுத்திருக்கிறார் நாஞ்சில் சம்பத்.

நாஞ்சில் சம்பத்
திராவிட இயக்க சொற்பொழிவாளராக திகழும் நாஞ்சில் சம்பத், அரசியல் மேடைகளில் பேசுகிறார் என்றால் கட்டிப்போட்டது போல கூட்டம் அப்படியே அமர்ந்து அவரது பேச்சை ரசித்து கேட்கும். அந்தளவுக்கு நகைச்சுவை நயம் ததும்ப, இலக்கியத் தென்றல் வீச அவர் பேச எடுத்துக்கொண்ட தலைப்புகளுக்கு பேச்சால் பெருமை சேர்ப்பார். இதேபோல் யாருக்கும் அஞ்சாமல் விமர்சனங்களையும் நெஞ்சுரத்தோடு முன்வைப்பார்.

ஜோல்னா பை
மதிமுகவில் இருந்தவரை வைகோவை போலவே கருப்புத்துண்டு அணிந்து கொண்டு கட்சி கரைவேட்டி கட்டி வந்தவர் பிறகு அதிமுகவுக்கு சென்றவுடன் கருப்புத்துண்டை கழற்றி வைத்தார். பிறகு அங்கிருந்து வெளியேறி அமமுக இப்போது திமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள அவர், வெள்ளை வேட்டி சட்டையை அறவே தவிர்த்து கலர்கலராக ஜிப்பாவும் தனது புதிய அடையாளமாக ஜோல்னா பையையும் மாற்றிக்கொண்டார்.

மேடைப்பேச்சு
தற்போது சொற்பொழிவாற்றுவது ஒன்று மட்டுமே நாஞ்சில் சம்பத்தின் முழுநேர பணியாக இருந்து வருகிறது. மேடைப் பேச்சுக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் மட்டுமே குடும்பத்தை கவனித்து வருகிறார் நாஞ்சில் சம்பத். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் போட்ட பதிவு ஒன்று தான் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு தமிழகமெங்கும் இருக்கக்கூடிய அவரது அன்பர்களையும், நண்பர்களையும், ரசிகர்களையும் பதற்றம் அடையச் செய்துள்ளது.

உயிருக்கு ஆபத்து
''Y- பிரிவு பாதுகாப்பில் இருப்பவர், என் உயிரெடுக்க உத்தரவிட்டிருப்பதாக ஊடக நண்பர் என்னிடம் சொன்னார், இதை உலகுக்கு சொல்கிறேன்.'' என நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இதனிடையே இந்தப் பதிவு அவர் வெளியிட்டது தானா என்பதை அறிவதற்காக ஒன் இந்தியா தமிழ் நாஞ்சில் சம்பத்தையே தொடர்பு கொண்டு பேசியது. அலைபேசியின் அழைப்பை ஏற்ற அவர், தம்பி ஒரு மசால் வடை வைங்க என அந்தப்பக்கம் ஹோட்டல் ஊழியரிடம் மிகவும் கூலாக கூறிக்கொண்டிருந்தார்.

நம்மிடம் பேச்சு
அதைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ''ஆம், நான் தான் அந்த ட்வீட்டை போட்டேன், அது உண்மை தான். எனக்கு போலீஸ் பாதுகாப்பு தருவதாக காவல்துறையில் இருந்து அழைத்துச் சொன்னார்கள். நான் கோழையல்ல, அதனால் வேண்டாம் என்று கூறிவிட்டேன். இன்னொரு காரணம், எனக்கு பாதுகாப்புக்கு வரும் போலீஸ்க்கு பயணச்செலவு, உணவுச்செலவு உள்ளிட்டவற்றை கவனிக்க என்னிடம் வசதியில்லை.'' என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications