மகாராஷ்டிரா போல் தமிழகத்தில் மாற்றம்.. பொடிவைத்து பேசும் நயினார் நாகேந்திரன்!
கன்னியாகுமரி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் மகாராஷ்டிராவை போல் தமிழ்நாட்டில் மாற்றம் வரும் என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் அறிவித்தார். இதற்கு தமிழக மின்சார வாரியத்தின் கடனும், மத்திய அரசின் அறிவுறுத்தலுமே காரணம் என்றும் விளக்கமளித்தார். அதேபோல் மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி 28 முறை மத்திய அரசு கடிதம் அனுப்பியதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பாஜக ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் தமிழக அரசின் மின்சாரக் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு மாவட்டங்களிலும் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு பாஜக சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நாயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு வீட்டு வரியை உயர்த்தி மூச்சுவிடும் நேரத்தில், திடீரென மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

நயினார் நாகேந்திரன் பேச்சு
இதற்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய அரசு உயர்த்த சொன்னதால் தான் மின் கட்டணத்தை உயர்த்தியதாக கூறுகிறார். ஆனால் மத்திய பாஜக அரசு அப்படி சொல்லவில்லை. மத்திய அரசு தனது கடிதத்தில், தமிழகத்தில் 22 சதவிகிதம் லைன் லாஸ் ஆகிறது. அதை குறைக்க வேண்டும். அதேபோல் கடனையும் குறைக்க முயற்சிக்க வேண்டும் என கூறியுள்ளது. வீட்டு வரியை உயர்த்தவோ, மின்கட்டணத்தை உயர்த்தவோ மத்திய அரசாங்கம் கூறவில்லை.

திமுக மீது விமர்சனம்
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் சொன்ன மகளிருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தை நிறுத்திவிட்டது. இப்படி மக்களை ஏமாற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது.

மாற்றம் வரும்
இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபின் மகாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழகத்தில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று அண்ணாமலை பேசி இருந்தார். அதனை குறிப்பிடும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் மாற்றம் வரும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications