CM விஜய் சார்.. எங்களுக்கு இலவச பஸ் திட்டம் வேண்டாம்.. குழந்தைகளுடன் பெண் பதிவிட்ட பரபர வீடியோ!
விருதுநகர்: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், முதல்வருமான விஜய், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணமில்லா இலவசப் பேருந்துப் பயணம் வழங்கப்படும் என்று முக்கிய வாக்குறுதியை அளித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள சாதாரண நகரப் பேருந்துகள் (Ordinary Town Buses) மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் வழங்க விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். இத்திட்டத்தை எப்படி செயல்படுத்தப்படுத்தலாம் என்பதை ஆலோசனை செய்து வரும் முதல்வர் விஜய்-க்கு ஒரு பெண் தனது குழந்தைகளுடன் பஸ் ஸ்டாப்பில் இருந்து வீடியோ பதிவிட்டு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எங்களுக்கு இலவச பேருந்து திட்டம் தேவையில்லை, அதற்கு பதிலாக உரிய நேரத்தில் போதுமான பேருந்துகளை இயக்குங்கள் என விருதுநகர் மாவட்டம் கோனம்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் முதலமைச்சர் விஜய்க்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கோனம்பட்டியைச் சேர்ந்த அந்தப் பெண், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேருந்துக்காகக் காத்திருந்தும், ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டுமே கூட்ட நெரிசலுடன் வந்ததாகவும், தனியார் பேருந்துகள் நிற்காமல் சென்றுவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
"ஃப்ரீ பஸ் எல்லாம் வேண்டாம் சார். எங்க ஊருக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் அல்லது 45 நிமிடத்துக்கு ஒரு பஸ் இருந்தாலே போதும். அவசரமாகப் போக வேண்டியவர்கள் எப்படிப் போவார்கள்? நாங்களே ஊருக்குள் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் நடந்து வந்துதான் பஸ் ஏறுகிறோம். இப்படியிருக்கையில் மருத்துவமனைக்குப் போக வேண்டியவர்கள் எப்படிப் போவார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், " எங்கள் ஊரில் அரசுப் பேருந்துகள் மட்டுமே நிற்கின்றன, ஆனால் அவையும் சரியான நேரத்தில் வருவதில்லை. தனியார் பேருந்துகள் எங்கள் ஊரில் நிற்பதில்லை. கோனம்பட்டிக்காரர்கள் பேருந்தில் போகக் கூடாதா?" என்று ஆதங்கத்துடன் கேட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இலவச பேருந்து திட்டத்தை அறிவிப்பை விட பலருக்கு சரியான நேரத்தில் போதுமான பேருந்துகள் வந்தால் போதும் என மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் இலவச பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பெண்களுக்கு பெரும் பலன் கிடைத்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், கிராமப்புறங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லாததால், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக மருத்துவ அவசரம், அலுவலக நேரம் மற்றும் மாணவர்களின் பயணத்துக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக பலரும் கூறுகின்றனர்.














Click it and Unblock the Notifications