"எந்தக் காலத்திலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது..!" திட்டவட்டமாக சொல்லும் பாஜக அண்ணாமலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீட் விலக்கு குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு என்பது எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக தொடங்கிப் பல முக்கிய கட்சிகளும் நீட் விலக்கில் ஒரே அணியில் உள்ளது.
அதேநேரம் தகுதியுள்ள மாணவ- மாணவிகள் மருத்துவம் படிக்கச் செய்வதை உறுதி செய்யவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு உள்ளதாக நீட் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

நீட் விலக்கு
மேலும், நீதிமன்ற தீர்ப்பையும் அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். இருப்பினும், நீட் விலக்கு பெற்றே தீருவோம் என்று ஆளும் கட்சியான திமுக உறுதியாக உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நீட் விலக்கை ஒரு வாக்குறுதியாகவே திமுக கொடுத்து இருந்தது. மேலும், நீட் பாதிப்பு குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அளித்த பரிந்துரை அடிப்படையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சர்கள்
இது இப்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும் கூட நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. இருப்பினும், தமிழக அமைச்சர்கள் நீட் தேர்வுக்கு நிச்சயம் விலக்கு பெறுவோம் என்றே தொடர்ந்து கூறி வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட சட்டப்படி நீட் விலக்கு பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்றே கூறி இருந்தார்.

அண்ணாமலை
இந்தச் சூழலில் நீட் தேர்வு தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அண்ணாமலை இப்போது கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையே நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் குமரியில் இருந்து நாடு முழுவதும் யாத்திரையைத் தொடங்குவதாக அறிவித்து உள்ளனர். ஆனால், உண்மையில் யாத்திரை தொடங்கும் இடத்தில் கூட காங்கிரஸ் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை.

செல்வாக்கு இல்லை
மக்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. இதனால் தான் முதல்வர் வருகிறார் வாருங்கள் என்று கூறி திமுகவினரை வைத்து காங்கிரஸ் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி உள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தாண்டி, வெறும் 8 ஆண்டுகளில் மோடி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதை ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தில் தெரிந்து கொள்வார்.

நீட் விலக்கு
நீட் தேர்வைப் பொறுத்தவரை, அதை எந்தக் காலத்திலும் ரத்து செய்ய முடியாது. திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்காகவே அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள். எனவே, நீட் தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது. இன்றைக்கு என்று இல்லை. அதிமுகவில் பல காலங்களிலும் பல்வேறு பிரிவுகள் இருந்துள்ளன. இருப்பினும், தமிழகத்தை அதிக காலம் அதிமுக தான் ஆட்சி செய்துள்ளது. இதனால் அக்கட்சியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

போலீசார்
தமிழக போலீசார் இப்போது சமூக ஊடகங்களைக் கண்காணிக்க சமூக ஊடக குழுக்களை அமைத்துள்ளனர். இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், இந்த குழுக்கள் நேர்மையாகவே செயல்பட வேண்டும். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் இப்போது அதிக குற்றச் சம்பவங்கள் நடப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. ஆனால், முதல்வர் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளதாகக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க பொய்" என்றார்.












Click it and Unblock the Notifications