விவேகானந்தர் பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. பிரதமர் மோடி தியானத்திற்கு இடையே அறிவிப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வரும் நிலையில், தீவிர பாதுகாப்பு சோதனைகளுடன் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் கடும் சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் சுமார் 45 மணி நேரம் அமர்ந்து தியானம் செய்கிறார். நேற்று மாலை தனது தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நாளை பிற்பகல் வரை தியானத்தை தொடர்கிறார். இதன் காரணமாக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுற்றுலா சீசன் உள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். இதன் காரணமாகவும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் காரணமாகவும் பிரதமர் மோடியின் இந்த ஆன்மிக பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். எனினும், திட்டமிட்டபடி பிரதமர் மோடி நேற்று மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்.
கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபத்தில் நேற்று மாலை தியானத்தை தொடங்கினார். இந்த தியானம் நாளை வரை தொடரும். அதன்பின் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, மாலை 4.05 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் பிரதமர் மோடி.
இன்று காலை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடற்பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர், சூரிய உதயம் பார்ப்பதற்கு மட்டும் தீவிர சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகை காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல நேற்று பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகை காரணமாக கடும் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதே சமயம், செல்போன்கள் மூலம் வீடியோ எடுக்கவும் கேமரா கொண்டு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று காலை 7.30 மணி அளவில் முதல் படகு புறப்படுகிறது என்றும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகளை சோதனை செய்த பின் அனுமதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். எனினும், பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபத்திற்கு அனுமதி இல்லை. ஸ்ரீபாத மண்டபம் வரை பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications