கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த அட்டகாசத்தால் தோற்றோம்.. கன்னியாகுமரி திமுக நிர்வாகி வீடியோ
கன்னியாகுமரி: கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த அட்டகாசம் அதிகம்.. ஆகவே தோல்வி அடைந்தோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக வளர வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவரது உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் திமுக நிர்வாகியான ராஜன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜன். திமுகவின் ஆதிதிராவிடர் நலப் பிரிவு மாவட்ட அமைப்பாளரான ராஜன், ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட திமுக துணை செயலாளர் மற்றும் பேரூர் செயலாளர் உட்பட்ட பல பொறுப்புகளை திமுக கட்சியில் பொறுப்பு வகித்தவர் ஆவார். இவர் பேச்சிப்பாறை பேரூராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். திமுக கட்சி தலைமை கவனத்திற்கு ராஜன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ராஜன் கூறுகையில், "கட்சியை வளர்க்க பல வழிகளில் உழைத்தேன். என்னை பேச்சிப்பாறை பேரூராட்சி தலைவராக உயர்த்தி அழகு பார்த்தது. திமுக இந்த கழகம் தோற்று இருப்பது கவலையடைய செய்துள்ளது. எங்கு தவறு நடைபெற்றது என்று உள்வாங்க வேண்டும். அதன் பிறகு அந்த தவறை திருத்தி கொள்ள வேண்டும் .
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்த அட்டகாசம் அதிகம். அமைச்சரை தேடி பொதுமக்கள் சென்றால், பொதுமக்களை அமைச்சரை சந்திக்கவிடாமல் அமைச்சர் உதவியாளர் ஜஸ்டின் தடுத்தார். அவசர நிலைகளில் போன் செய்தால் போன் எடுப்பது இல்லை. அரவணைத்து செல்ல வேண்டிய அமைச்சர் உதவியாளர் தொண்டர்களை துரத்தி அடித்தார். இவரால் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் திமுக அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
அமைச்சர் உதவியாளர் கட்சி வாட்சப்ப் குறுப்பில் இருந்து தன்னை நீக்கி விட்டார். என்னை நீக்க அவர் யார் .. நான் கையில் உதய சூரியனை பச்சை குத்தி எத்தனை ஆண்டுகளாக திமுக உண்மையான தொண்டனாக இருக்கிறேன் தெரியுமா.. நீயெல்லாம் வந்தேறிகள், வேடந்தாங்கல் போல திமுகவில் இருந்து கூடியவன்.. எப்படி என் பெயரை அகற்றலாம் .. பல கட்சிகளில் இருந்து வந்தவர்களை கட்சியில் சேர்க்க காரணமாக இருந்த நீ அவர்கள் தற்போது கட்சியில் இருக்குகிறார்களா... அவர்கள் வேறு கட்சிக்கு ஓடுகின்றார்கள்,
முன்னாள் அமைச்சர் உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எங்களை மதிக்காத காரணத்தால் கட்சி அழிந்து வருகிறது. இந்த செய்தி தலைமைக்கு தெரியும் வரை திமுகவினர் பகிர வேண்டும். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லை என்றால் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் திமுக வளராது.. ஐந்தாண்டு கட்சியில் சுகம் அனுபவித்து விட்டு, சம்பாதித்து விட்டு, தவெக விற்கு பதவி சுகம் மற்றும் பணம் சம்பாதிக்க ஓட்டம் பிடித்து விட்டார்கள்" இவ்வாறு ராஜன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் விளக்கம் அளித்தால் அவர்களது தரப்பில் கூறுவது என்ன, உண்மை என்ன என்பது தெரியவரும்.














Click it and Unblock the Notifications