ரேஷன் கார்டு வைத்துள்ள ஒவ்வொருவரும் அறிய வேண்டியது.. நாளை மறுநாள் மிக முக்கியமான நாள்
கன்னியாகுமரி: பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடு மற்றும் மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும் நடத்தப்படுகிறது.. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக வட்ட வழங்கல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.
ரேஷன் கார்டு வைத்துள்ள ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறை நடக்கும் முகாம் பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.ஏனெனில் இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து உடனே பயன்பெற முடியும். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் அலுவலர்களிடம் அளித்து பயன் பெற முடியும்.

அதேபோல் ரேஷன் கார்டில் முகவரி மாற்றுவது, ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயர் சேர்ப்பது, ரேஷன் கார்டில் செல்போன் எண்களை பதிவு செய்வது, ரேஷன் கார்டில் திருமணமான மகன் அல்லது மகள்களின் பெயரை நீக்குவது போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்றால் முகாமிலேயே எளிதாக மேற்கொள்ளலாம். இந்த முகாமிற்கு அந்தந்த வட்ட வழங்கல் அதிகாரி நேரில் வருவார். அவரிடம் உடனே நிவாரணம் பெற முடியும். இந்த முறை வரும் சனிக்கிழமை முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடு மற்றும் மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், இறந்த குடும்ப தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்பட மாற்றம் செய்தல், ஆதார் அட்டையில் பெண் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் மற்றும் தொலைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications