மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி..இனி வாய்ப்பில்லை..கரண்ட் கட் ஆகுமா? செந்தில் பாலாஜி தகவல்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கரூர்: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படாது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 99 சதவிகிதம் பேர் ஆதாருடன் மின் இணைப்பை இணைத்துள்ளதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த தகவலை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இலவச மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நவம்பர் 15ஆம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் என கூறப்பட்டது.
இதன் பின் ஜனவரி 31 தேதி முதல் பிப்ரவரி 15ஆ ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் 7 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்ததன் காரணமாக கால அவகாசம் பிப்ரவரி 28 தேதி இன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்களும், கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாளாகும். கடந்த முறை கால நீட்டிப்பு வழங்கிய போது இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே, மீதமுள்ள மின் பயனாளர்கள், ஆதார் எண்ணை இன்றே இணைக்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் வரும் 4ஆம் தேதி கரூர் வந்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மரக்கன்றை நட்டு முதல்வர் பிறந்தநாள் விழாவை தொடங்கி வைக்கிறார். துறை சார்ந்த ஆய்வுக்கூட்டங்களை மேற்கொள்கிறார்.
மின்சார இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொடுத்து விட்டோம். இன்றுதான் கடைசி நாள். இனிமேலும் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை 2.66 கோடி பேர் இணைத்துள்ளனர். இனி ஒரு லட்சம் பேர் மட்டுமே இணைக்கவில்லை. அவர்களும் இன்று மாலைக்குள் ஆதாரை இணைத்து விடுவார்கள். இன்று மாலையுடன் மின் இணைப்பை ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நிறைவடைகிறது. எனவே இன்று மாலைக்குள் ஆதாரை இணைத்து விடுவார்கள் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
குறுகிய கால கட்டத்தில் 2.66 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தது இமாலய சாதனை என்றும் கூறினார். ஆதாரை இணைக்காத மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் எதுவும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications