இன்னும் 4 வருஷம் ஆட்சி தொடர்வது திமுக கையில் இருக்கு.. கரூரில் பாஜக அண்ணாமலை பேச்சு
கரூர்: நீட் தேர்விலிருந்து திமுக விலக்கு கோரி வரும் நிலையில் இன்னும் 4 ஆண்டுகள் திமுக ஆட்சி தொடருமா என்பது அவர்களது கையில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழகத்தில் பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கட்சிகள் மாறி மாறி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூரில் சேப்பாக்கம் எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
நீங்க எப்போ எப்படி டிசைன் டிசைனாக நடிப்பீர்கள் எனத் தெரியும்! அதிமுக-பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
நீட்
அப்போது அவர் கூறுகையில் தேர்தல் பிரசாரங்களில் நான் அதிகம் பேசியது நீட் குறித்துதான். நீட் சம்பந்தமான மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி, 150 நாட்களுக்கு பிறகு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திரும்பவும் நீட் சம்பந்தமாக மசோதா நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் என்றார்.
பள்ளி மாணவர்கள்
நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நசுக்குவதாக அரசியல் கட்சிகள் வாதம் செய்கின்றன. உதயநிதி தனது தேர்தல் பிரச்சாரத்தில் எய்ம்ஸ், நீட் உள்ளிட்டவை குறித்துதான் அதிகம் பேசியுள்ளார். தற்போதும் நீட் குறித்தே பேசி வருகிறார். இந்த நிலையில் உதயநிதி பேசிய அதே கரூரில் பாஜக அண்ணாமலையும் நீட் குறித்து பேசியுள்ளார்.
புகளூர்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி, புகளூர் நகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 9 பேரை ஆதரித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது பேசுகையில் பொங்கல் தொகுப்பை உருப்படியாக கொடுக்காத தமிழக அரசு. ஆனால் கடைகோடி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தியது மத்திய அரசு.
திமுக ஆட்சி
தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரி திமுகவினருடையது. நீட் மூலம் சாதாரண மக்களின் குழந்தைகள் மருத்துவம் படிக்கின்றனர். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளியில் படித்த 545 மாணவர்கள் நீட் மூலம் மருத்துவம் கிடைக்க வழி கிடைத்துள்ளது. இன்னும் 4 வருடம் திமுக ஆட்சி தொடருமா என்பது அவர்களது கையில் உள்ளது.
பாஜகவுக்கு வெற்றி
அரவக்குறிச்சி தொகுதியில் எனக்கு 67 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. கருணாநிதியின் அதே டெக்னிக் மூலம் கதை, வசனம் எழுதி ஆட்சி நடத்தி வருகிறார் ஸ்டாலின். சட்டசபை தேர்தலில் திமுக 517 வாக்குறுதிகளை கொடுத்தது. 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என பேசினார்.