நள்ளிரவே கரூர் வந்த முதல்வர்! செய்தியாளர் சந்திப்பில் கண் கலங்கிய ஸ்டாலின்!
கரூர்: கரூரில் நடந்த இந்த கொடூரமான சம்பவத்தை விவரிக்க முடியாது. கட்சிக் கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவரை நடக்காதது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வேன் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய போது அவர் கண்கள் கலங்கின.
கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததும் கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் போகாமல் விஜய் நேராக திருச்சிக்கு வந்து விமானத்தில் சென்னை சென்றுவிட்டார்.
குறைந்தபட்சம் கரூரில் எங்காவது தங்கியிருந்தாவது மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்றுவிட்டார். அவரது நீலாங்கரை வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கரூரில் நடந்த இந்த கொடூரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாது.
அதை பற்றி விவரமாக சொல்ல கூட என் மனம் ஒப்பவில்லை. அந்த அளவுக்கு வேதனையில் இருக்கிறேன். செய்தி கிடைத்த உடனே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி பார்க்கச் சொன்னேன். மாவட்ட ஆட்சியரும் சில விஷயங்களை என்னிடம் சொன்னார்.
முதலில் 4, 5 பேர் என்றுதான் சொன்னார்கள். பின்னர் திடீரென மரணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதையடுத்துதான் அருகில் இருந்த அமைச்சர்களை உடனடியாக கரூர் செல்லுமாறு உத்தரவிட்டேன். இப்படிப்பட்ட நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சம்பவத்தில் 39 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். காலையில் வரலாம் என்றுதான் விமான டிக்கெட் போட்டிருந்தேன். ஆனால் இந்த கொடூரமான காட்சிகளை டிவியில் பார்த்த பிறகு என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை.. அதனால் நள்ளிரவு 1 மணிக்கு கிளம்பிவிட்டேன்.
விஜய் கைது செய்யப்படுவாரா என்று கேட்கிறீர்கள். அரசியல் நோக்கத்தோடு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைத்திருக்கிறோம். அந்த குழுவின் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என கூறிய முதல்வர் ஸ்டாலின் இறந்தவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் குறித்து தெரிவித்த போது அவரது கண்கள் கலங்கின.












Click it and Unblock the Notifications