அதிமுக மாஜி அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. முன்ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தாக்கல் செய்திருந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைமைறைவாக இருக்கும் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும் நிலையில், முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆகியிருப்பது அவருக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் போலீஸ் மற்றும் எஸ்பி அலுவலத்தில் புகார் தரப்பட்டது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து, இந்த நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனால் விஜயபாஸ்கர், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். தன்னுடைய அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் விஜபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த நிலையில், எம்.ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் நீதிமன்றத்தில் மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம் கடந்த இரண்டு நாட்களாக உத்தரவை தள்ளி வைத்து இருந்தது.
இந்த நிலையில் இன்று விசாரித்த கரூர் நீதிமன்றம் எம் ஆர் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல் அவரது சசோகதரர் சேகரின் முன் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications