தவெக வழக்கறிஞர் வைத்த ஒற்றை வாதம்.. கரூர் தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேருக்கு ஜாமீன் தந்த நீதிபதி
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்த த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக கைதான த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 2 பேருக்கு நீதிமன்ற காவலை நீட்டிக்க மறுத்த நீதிபதி அவர்களுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறார். நேற்று நீதிமன்றத்தில் என்ன நடந்தது.. தவெக வழக்கறிஞர் வைத்த வாதம் என்ன என்பதை பார்ப்போம்.
கரூர் மாநகராட்சியில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடந்த தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார். நடிகர் விஜய்யை பார்க்க பலரும் ஆர்வம் காட்டியதால், அங்கு காலையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 7 மணி அளவில் விஜய் வந்தபோது மிகப்பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி மூச்சு விட முடியாமலும், மிதிப்பட்டும் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), கரூர் நகர தவெக பொறுப்பாளர் மாசி என்கிற பவுன்ராஜ் (34) ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இருவரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், நேற்று மீண்டும் அவர்களை போலீசார் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது காவல் நீட்டிப்பு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ. அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னரே சிறப்பு புலனாய்வு குழுவால் ஆவணங்களை ஒப்படைக்க முடியும். அது வரை இருவரின் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும். சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறினார்.
அப்போது நீதிபதி, 2 பேரிடமும் மீண்டும் சிறைக்கு செல்ல விரும்புகிறீர்களா? என கேட்டார். அதற்கு த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும், கரூர் நகர தவெக பொறுப்பாளர் மாசி என்கிற பவுன்ராஜ் ஆகியோர், தாங்கள் நீதிமன்ற காவலில் ஏற்கனவே இருந்து விட்டோம். எனவே மீண்டும் சிறைக்கு செல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.
த.வெ.க. தரப்பு வக்கீல் வாதிடுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது. இதனால் இந்த வழக்கில் இதற்குமேல் சிறப்பு புலனாய்வு குழுவால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு கேட்க முடியாது.
எனவே இந்த வழக்கில் இதற்குமேல் சி.பி.ஐ.யால் மட்டுமே நீதிமன்ற காவல் நீட்டிப்பு கேட்க முடியும். சிறப்பு புலனாய்வு குழுவினர் சேகரித்த ஆதாரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடவில்லை. எனவே இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை தொடர்ந்து கரூர் நீதிபதி பரத்குமார், த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு வழங்க முடியாது என்று கூறியதுடன் இருவரையும் ஜாமீனில் விடுவித்தார். இதையடுத்து வக்கீல்களுக்கு த.வெ.க. நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் குடும்பத்தினர் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.












Click it and Unblock the Notifications