வருமான வரித்துறை முன்கூட்டியே தகவல் சொல்லவில்லை.. பாதுகாப்பு குறைபாடு பற்றி கரூர் எஸ்.பி விளக்கம்
கரூர்: கரூரில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக தொண்டர்கள் விரட்டியடித்த நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து முன் கூட்டியே தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கரூர் எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை என அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும், அவருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் முறை நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் உறவினர்கள் என தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடன் பிறந்த தம்பி அசோக் வீடு அருகே வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் எல்லை மீறிய நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சோதனை நடத்த வந்த அதிகாரி ஒருவரை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வும் நடந்துள்ளது.
இந்த விவகாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனை யார்-யார் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்றது. எத்தனை இடங்களில் நடந்தது என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வருமான வரித்துறை தரப்பில் இருந்து இன்னும் வெளியிடவில்லை. சோதனை முழுவதும் முடிவடைந்த பின்னரே உறுதியான தகவல் வருமான வரித்துறை தரப்பில் இருந்து அறிக்கையாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
காலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் தனது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார்.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகை, வாகனம் உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து மற்ற இடங்களில் நடைபெற்ற சோதனைக்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் பல இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையும், அதிகாரிகள் வாகனம் தாக்கப்பட்ட விவகாரமும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை குறித்து முன் கூட்டியே தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கரூர் மாவட்ட எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "வருமான வரித்துறை சோதனை குறித்த தகவல் அறிந்து 9 இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். வருமான வரித்துறை சோதனைக்கு செல்வது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு கேட்கப்படும்.
ஆனால், வருமான வரித்துறை சோதனை குறித்து முன் கூட்டியே தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. போலீஸ் பாதுகாப்பும் கேட்கப்படவில்லை. தற்போது வரை எங்கு சோதனை நடைபெறுகிறது என தகவல் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications