ஸ்டாலினும், உதயநிதியும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்.. கரூரில் சீறிய ஜேபி நட்டா!
கரூர்: ஸ்டாலினும், உதயநிதியும் கட்டப் பஞ்சாயத்து, ஊழல், வாரிசு அரசியல் செய்து வருகின்றனர். சனாதனத்தை இழிவாக பேசியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது எனப் பேசியுள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.
கரூர் பிரேம் மஹாலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பாஜக வேட்பாளர் வி.வி. செந்தில்நாதனை ஆதரித்து பேசிய ஜே.பி.நட்டா, "கலாச்சாரம் மிக்க தமிழ் மண்ணிற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளுவர், பாரதியார் போன்றோர் இந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர். கடுமையாக உழைக்கக்கூடியவர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
காசி தமிழ் சங்கமம் நடத்தி தமிழத்திற்கும், காசிக்கும் இணைப்பை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி. நாம் 2019ஆம் ஆண்டில் கொரோனாவை சந்தித்தாலும், பொருளாதார வளர்ச்சியில் 11ஆவது இடத்திலிருந்து, 5ஆவது இடத்துக்கு முன்னேறினோம். மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால், உலக பொருளாதாரத்தில் நாம் 3-வது இடத்திற்கு முன்னேறுவோம் என்பதில் சந்தேகமே இல்லை.
எலக்ட்ரானிக் உற்பத்தியில் முன்னேறியதோடு, செல்போன் உற்பத்தியில் மேட் இன் சைனா என்று இருந்ததை மாற்றியமைத்து, "மேட் இன் இந்தியா" என்று முன்னேறி இருக்கிறோம். கார் உற்பத்தியில் ஜப்பானை முந்தி இருக்கிறோம். எஃகு உற்பத்தியிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி.
உழவர்கள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை முன்னேற்றும் திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி, உலகத்தில் உன்னதமான நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டி உள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மோடியின் பல்வேறு திட்டங்கள் உள்ளன. 25 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருந்த நிலை மாறி முன்னேறி உள்ளனர்.
ரயில்வே, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், சென்னை மெட்ரோ என பல்வேறு திட்டங்களுக்கு தமிழகத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் நிதியை அளித்து, பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது பாசம் வைத்துள்ளார். ஒரு பக்கம் மோடியின் உன்னதமான ஆட்சி. மற்றொரு பக்கம் இந்தியா கூட்டணி ஊழல் மிகுந்த கூட்டணியாக இருக்கிறது.
ஒரு பக்கம் மோடியின் சாதனையை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறோம். மற்றொரு பக்கம் ஊழல் கட்சியாகவும், குடும்ப கட்சியாகவும், கட்டப்பஞ்சாயத்தை நடத்தும் கட்சியாகவும் இருக்கிறது திமுக. திமுக பணத்தை கொள்ளை அடிக்கும், கட்டப்பஞ்சாயத்து செய்யும், வாரிசு அரசியல் செய்யும் கட்சியாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியும் திமுகவுக்கு சளைத்தவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு ஊழல்களை செய்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் ஊழல் கட்சியாகவும், குடும்ப கட்சியாகவும் உள்ளனர். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் குடும்ப கட்சியை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்தில் ஸ்டாலினும், உதயநிதியும் கட்டப் பஞ்சாயத்து, வாரிசு அரசியல் செய்து வருகின்றனர். இவர்கள் சனாதனத்தை இழிவாகப் பேசியவர்கள். சனாதனத்தை இழிவாக பேசியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது" எனப் பேசியுள்ளார் ஜே.பி.நட்டா.












Click it and Unblock the Notifications