கரூர் மாணவி தற்கொலை விவகாரம்.. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
கரூர்: கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் புகாரை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Recommended Video
கரூரை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 19-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவர் டைரியில் தற்கொலைக்கான காரணத்தையும் எழுதி வைத்திருந்தார்.
அதில் பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும். எனக்கு வாழ்வதற்கு மிகவும் ஆசை, ஆனால் என்னால் முடியவில்லை. பெரியாளாகி நிறைய பேருக்கு உதவி செய்யவும் ஆசை.

மாணவி
ஆனால் உங்கள் எல்லாரையும் விட்டு நான் போகிறேன். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் நான் இந்த உலகை விட்டு போகிறேன். எனக்கு தொல்லை கொடுத்தவனை பற்றி கூறுவதற்கு கூட பயமாக இருக்கிறது என அவர் கைப்பட எழுதி வைத்திருந்தார். இந்த நிலையில் தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கமேடு காவல் நிலையத்திற்கு மாணவியின் தாய் சென்றுள்ளார்.

காவல் ஆய்வாளர்
தன்னுடைய உறவினர்களுடன் சென்ற நிலையில் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகாரை பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு உறவினர்களையும் கடுமையாக தாக்கியதும் தெரியவந்தது. இரவு சென்ற உறவினர்களையும் மாணவியின் தாயையும் இரவு முழுவதும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்காமல் காவல் நிலையத்திலேயே விசாரணை என்ற பெயரில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

போலீஸார் விசாரணை
இந்த நிலையில் சிறுமியின் கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே வேளையில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட எஸ் பி சுந்தரவடிவேல் உத்தரவிட்டிருந்தார்.

காவல் நிலையம்
இந்த நிலையில் கரூர் மாணவிக்கு நடந்தது குறித்தும் காவல் நிலையத்தில் நடந்தது குறித்தும் மாணவியின் தாயார் பேட்டி அளித்திருந்தார். அதில் பள்ளியில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் கண்ணதாசனை பணியிடைநீக்கம் செய்ய திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications