சமூக போராளி முகிலன் மீது குளித்தலை பெண் திடீர் புகார்
கரூர்: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மீது குளித்தலையை சேர்ந்த பெண் திடீரென பாலியல் புகார் அளித்துள்ளார்.
சமூக போராளி முகிலன். இவர் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களிலும் முன் நின்ற போராளி. இந்த நிலையில் கடந்த மாதம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முகிலன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம், உத்தரவிடச் சொன்னது யார் என்பன போன்றவற்றுக்கு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பின்னர் அவர் எழும்பூர் ரயில் நிலையத்தில் மதுரை செல்ல ரயில் ஏறிய நிலையில் அவரை பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் காணவில்லை. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றம் செய்யப்பட்டது. பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும் தொடர்ந்து முகிலனுக்காக போராடி வருகின்றன.
இந்த நிலையில், காணாமல் போயுள்ள முகிலன் மீது கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்துள்ள புகாரில் நான் முகிலனுடன் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன்.
திருமணம் செய்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார் என அந்த பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ஏன் திடீரென இப்போது முகிலன் மீது புகார் கொடுத்துள்ளார் என்று தெரியவில்லை. முகிலனைக் கண்டுபிடிக்கக் கோரி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அவருடன் இதுவரை போராட்டக்களத்தில் இருந்த பெண் திடீரென இப்படி ஒரு புகாரைக் கிளப்பியிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications