அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் வைத்து ‘வசூல்’ வேட்டை.. பாஜக கடும் எச்சரிக்கை.. கரூரில் பரபரப்பு!
கரூர் : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ரசிகர் மன்றம் பெயரில் குளித்தலை குமரேசன் என்பவர் பண வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்த நிலையில், பாஜக வழக்கறிஞர் அணி சார்பாக இதுதொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, இளைஞர்கள் பலரும் அண்ணாமலையைப் பின்தொடர்ந்து, அவரது பேச்சுகளையும், செயல்பாடுகளையும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் அண்ணாமலை ஃபேன் கிளப், அண்ணாமலை ஆர்மி என்பது போன்ற பெயரிலான பக்கங்களில் அண்ணாமலையின் பேச்சுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலை ரசிகர் மன்றம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுவதாக தற்போது வெளியாகியுள்ள புகார் பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் சிலர் பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியே, இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் உமாதேவி, குளித்தலை வட்டம், சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் வீரப்பன் மகன் குமரேசன் என்பவருக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குமரேசன், அண்ணாமலை பெயரைப் பயன்படுத்தி பண வசூல் வேட்டையில் இறங்கி இருப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உமாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி, அவரது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் வசூல் செய்வதும் அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் ரசிகர் மன்ற வளர்ச்சி நிதி என்ற பெயரில் வசூலும் செய்வதாக தெரியவருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் பெயரையும், கரூர் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் வி.வி. செந்தில்நாதன் பெயரையும் தவறுதலாக பயன்படுத்தி வசூல் எதுவும் மேற்கொள்ளக்கூடாது.
தவறும் பட்சத்தில் தங்கள் மீது சட்டப்படியான குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை தொடங்கப்படும் என்பதை இந்த பொது அறிவிப்பின் மூலம் அறியவும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவில் பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபடுவதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் கரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications