போலீஸ் மீது நம்பிக்கை உள்ளது, மாணவர் போராட்டம் தேவையில்லை..தற்கொலை செய்த கரூர் மாணவியின் தாய் பேச்சு
கரூர்: கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், போலீஸ் விசாரணையில் முழு நம்பிக்கை உள்ளதாகவும் மாணவர்கள் போராட்டம் எதுவும் வேண்டாம் என்றும் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தற்கொலையால் உயிரிழந்தார்.
அப்போது ''பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்" என அவர் கடிதம் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் ஆய்வாளர் மிரட்டல்
கரூர் மாணவி உயிரிழந்ததற்கு அப்பள்ளியின் வேதியியல் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையோ காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், மாணவி உயிரிழந்த நாளன்று இது குறித்து புகார் அளிக்க வெங்கமேடு காவல் நிலையத்திற்கு மாணவியின் தாயார் அவரது உறவினர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவைப் பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தகாத முறையில் பேசியதோடு, புகார் அளிக்க வந்த மாணவியின் உறவினரை அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
இதையடுத்து கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் புகாரை வாங்க மறுத்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்தச் சூழலில், கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மாணவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த மாணவியின் தாயர், போலீஸ் விசாரணையில் முழு நம்பிக்கை உள்ளதாகவும் மாணவர்கள் போராட்டம் எதுவும் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

போராட்டம் வேண்டாம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "போலீசார் விசாரணை முறையாக நடந்து வருகிறது. மாணவர்கள் போராட்டங்கள் எதுவும் வேண்டாம். எங்களுக்கு போலீசார் விசாரணையில் முழு நம்பிக்கை உள்ளது. எனக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்கு யார் மீதும் எனக்குச் சந்தேகம் இல்லை. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்போதைக்கு அவர்கள் வேலையைச் செய்ய விடுவதே நல்லது.

நம்பிக்கை உள்ளது
எந்த பிரச்சனையும் தற்போதைக்கு வேண்டாம். என் மகள் ஏன் இந்த முடிவு எடுத்தார் என்று எனக்கே தெரியவில்லை. ஆரம்பத்தில் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது அவர்கள் விசாரணையைப் பார்க்கும் போது நம்பிக்கை வந்துள்ளது. என் மகள் இறப்பிற்கான காரணம் விரைவில் தெரிய வரும் என்று நம்பிக்கை உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications