கையில் பையுடன் சுற்றிய பெண்.. போலீஸ் சோதனையில் செல்போன்கள் பறிமுதல்.. பரபரப்பு!
கரூர்: கரூர் மாநகராட்சியின் 38ஆவது வார்டில் வாக்களர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 37 செல்போன்கள், டோக்கன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

இன்று காலை 7 மணிக்கு மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்று வருகிறது.
சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சற்று தாமதமாகத் தொடங்கியது. தமிழகத்தில் சில இடங்களில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதனிடையே கரூர் மாவட்டத்தில் 38ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பெண் ஒருவர் பையுடன் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரது பையைச் சோதனை செய்தனர்.
அப்போது, அதில் இருந்த 11 செல்போன்களையும் அங்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் பெயர் பொறிக்கப்பட்ட டோக்கனையும் போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஒரு வீட்டை அடையாளம் காட்டினார்.
அங்கு போலீசார் நடத்திய சோதனையில் கரூர் மாநகராட்சியின் 38ஆவது வார்டில் வாக்களர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 37 செல்போன்கள், டோக்கன்களையும் போலீசார் கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications