"அது பிரைவேட் பஸ்ப்பா" நாதக தம்பிகள் செய்த குபீர் செயல்.. கரூரில் விழுந்து சிரித்த போலீஸ்!
கரூர்: கரூரில் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்ட போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஈடுபட்ட போது, திடீரென நாதக நிர்வாகி ஒருவர் தனியார் பேருந்தில் தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்டியது காவல்துறையினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என்று பெயர் எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றுவதை போல் மாநிலத்தின் பெயர் இடம்பெற வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வந்தனர். அதாவது அரசுப் போக்குவரத்து கழகம் என்ற பெயருக்கு முன்பாக தமிழ்நாடு பெயர் இடம்பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இது சோசியல் மீடியாவில் கவனம் பெற்ற நிலையில், திடீரென நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இதனை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களின் பேருந்து நிலையங்களில் அரசுப் போக்குவரத்து கழகம் என்ற பெயருக்கு முன்பாக தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர். இதனை நாதக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் கரூர் பேருந்து நிலையத்தில் நாதக சார்பாக மண்டலச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மருத்துவர் அணி செயலாளர் கருப்பையா தலைமையில் சுமார் 10க்கும் அதிகமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்ட முயன்றனர்.
அதனை போலீசார் தடுத்து அவர்களை தனியார் பேருந்தில் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது தனியார் பேருந்தில் ஏற்றப்பட்ட நாதக நிர்வாகி திடீரென அந்த பேருந்திலும் தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்ட முயன்றார். அதனை பார்த்து காவல்துறை, "தம்பி தம்பி.. இது பிரைவேட் பஸ்ப்பா" என்று கூறி விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினர்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. இதையடுத்து போராட்டத்தின் போது இப்படியான சம்பவங்கள் நிகழ்வது சாதாரணம் என்று நாதகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசுப் போக்குவரத்து கழகத்தின் பெயரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications