கரூரில் சீமான் தங்கிய ஹோட்டல் முன் போலீஸ் குவிப்பு.. ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் திரண்டதால் பரபர!
கரூர்: கரூர் அருகே வெண்ணெய்மலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கண்டித்து மக்கள் போராடி வரும் நிலையில், நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். முன்னதாக, சீமான் கரூரில் தங்கி இருந்த ஹோட்டலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அருகே உள்ள காதப்பாறை ஊராட்சி வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் காதப்பாறை ஊராட்சி வெண்ணெய்மலை, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி சின்னவடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அரசு எடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெண்ணெய்மலை பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தடுத்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வருவாய்த் துறை துணையுடன் போலீஸார் பாதுகாப்புடன் வெண்ணெய்மலை, சின்னவடுகப்பட்டி பகுதிகளில் உள்ள சுமார் 20 காலி இடங்களில், அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.
பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு என்று கூறி தமிழக அரசு அகற்றி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டார்.
இதற்காக கரூர் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு விடுதி ஒன்றில் தங்கி இருந்தார். அங்கு தற்போது போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சீமான், ஹோட்டலில் இருந்து வெண்ணெய்மலை செல்வதை தடுப்பதற்காகவே ஹோட்டலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்த தகவலை அறிந்து, அங்கு ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஹோட்டலில் இருந்து புறப்பட்ட சீமான், வெண்ணெய்மலை சென்று அங்கு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து, ஆக்கிரமிப்பு அகற்றத்தைக் கண்டித்து உரையாற்றியுள்ளார். மக்களுக்குப் போகத்தான் கடவுளுக்கு, எந்தக் கடவுளும் எனக்கு 500 ஏக்கர் நிலம் கொடு என்று கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications