கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் எம்.ஆர்.வி. படை... கலக்கும் கரூர்.. அப்செட்டில் செந்தில்பாலாஜி..!
கரூர்: கரூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரத்யேக குழு ஒன்றை பணியமர்த்தி இருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அவர்களுக்கான ஊதியத்தை தனது சொந்த நிதியில் இருந்து கொடுக்கும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பணிகளில் முழு பாய்ச்சல் காட்டத் தொடங்கிவிட்டார்.
ஆனால் அதேவேளையில் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தம் மீதுள்ள வழக்குகள் காரணமாக அப்செட் ஆகியிருக்கிறார்.

கடும் போட்டி
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜியும் ஒருவரை ஒருவர் அரசியலில் வீழ்த்த கடுமையாக போராடி வருகின்றனர். வரும் தேர்தலில் செந்தில்பாலாஜி வெற்றிபெறக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கும் எம்.ஆர்.வி. அதற்கான காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளார். இதேபோல் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் வெற்றிப்பெறக் கூடாது என செந்தில்பாலாஜி தரப்பும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

புதுமை பாணி
இதனிடையே சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளதால் கரூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்கான செயல்திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூர் மக்களின் குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்வதற்கான பாலோ-அப் பணிகளை கவனிக்க 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடங்கிய ஒரு படையை உருவாக்கியுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

தேர்தல் பரப்புரை
மேலும், தனக்கான தேர்தல் பணிக்காக அலுவலகத்தை ஹை டெக் முறையில் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அரசின் சாதனைகளை கடந்து கரூர் மக்களுக்காக தாம் என்னவெல்லாம் செய்தேன் என்பதை தொகுதி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அடுத்த கட்டமாக தொடங்க இருக்கிறார். இப்படி தேர்தல் பணிகளில் இவர் முழு பாய்ச்சல் காட்டி வரும் நிலையில் எதிர்தரப்பான செந்தில்பாலாஜி சில நாட்களாக அப்செட்டில் இருந்து வருகிறார்.

கொரோனா
கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற மீண்டு வந்த செந்தில்பாலாஜி தம்மீதுள்ள வழக்குகளால் மனச்சோர்வடைந்துள்ளார். இதனால் கட்சிப் பணிகளில் முழு கவனம் செலுத்த முடியாமல் சில நேரங்களில் தடுமாறவும் செய்கிறார். இருப்பினும் எம்.ஆர்.வி.யை தேர்தல் தோற்கடித்து தீருவேன் என சபதமேற்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications