திண்ணையில் பாட்டி.. சத்தமில்லாமல் தூக்கில் தொங்கிய மாணவி.. காவு வாங்கிய "நீட்".. கதிகலங்கிய கரூர்
நீட் தேர்வு பயம் காரணமாக, கரூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
கரூர்: நீட் தேர்வு பயம் காரணமாக, இன்னொரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கரூரை உலுக்கி எடுத்து வருகிறது.
கரூர் மாவட்டம், தரகம்பட்டியை அடுத்துள்ளது கொளுத்தினிப்பட்டி.. இங்கு வசித்து வந்தவர் சேகர்... இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பிரீத்தி.. 18 வயதாகிறது.
உப்பிடமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் இவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்... கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.

புலம்பல்
அதனால், இந்த வருடம் நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார்.. இதற்காக லாலாபேட்டையை அடுத்த வேங்காம்பட்டியில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிலேயே தங்கி படித்து கொண்டிருந்தார்.. ஆனால், கடந்த வருடத்தை போலவே, இந்த வருடமும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேனோ என்று அடிக்கடி பாட்டியிடம் புலம்பி கொண்டே இருந்தாராம் பிரீத்தி... நாளுக்கு நாள் நீட் தேர்வு பயம் அதிகமாகி கொண்டே வந்துள்ளது.

போஸ்ட் மார்ட்டம்
இந்நிலையில், இந்நிலையில் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்... இதையடுத்து அவரது சடலத்தை பார்த்து குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்... இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரீத்தியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்... மேலும், இந்த சம்பம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்கிட்டு தற்கொலை
நேற்றைய தினம், அதே பகுதியில் உள்ள வீட்டில் துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு வீட்டில் இருந்த அனைவரும் சென்றுவிட்டனர்.. பாட்டி மட்டும் நிகழ்ச்சிக்கு போகாமல், வீட்டிற்கு வெளியே திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.. வீட்டிற்குள் தனியாக இருந்போதுதான் மாணவி ப்ரீத்தி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.. பாட்டி வெளியில் இருந்து, பேத்தியை பலமுறை கூப்பிட்டும் பதில் வரவில்லை.. அதனால் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அலறியுள்ளார். அதற்கு பிறகு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தவர்கள், ப்ரீத்தியின் பெற்றோருக்கும், லாலாபேட்டை போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

சிதைந்த கனவு
நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்றளவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பே நிலவி வருகிறது... நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட்தேர்வு, பல மாணவ, மாணவியரின் உயிருக்கும் உலை வைத்து வருகிறது இதயத்தை பிசைந்தெடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications